
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.
அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. இது தவிர இதர கட்சிகளான தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாக களமிறங்கியுள்ளார். அதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (24.06.2025) சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது ஏற்கனவே தயார் நிலையில் உள்ள புதிய மாநில நிர்வாகிகள் நியமிப்பதற்கான பட்டியலில் ஒப்புதல் பெறுவதற்கும், பாஜக - அதிமுக கூட்டணியில் மேலும் ல் மேலும் பல கட்சிகளைக் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதோடு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் நாளை (25.06.2025) செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.