
தமிழ்நாட்டில் பல கிராமங்களில் வகுப்பறை கட்டடங்கள் இல்லாமல் பல அரசுப் பள்ளிகள் மரத்தடியில் இயங்கி வருகிறது. அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல் இன்னும் பரத்தடியிலும் சமுதாயக் கூடங்களிலும் இயங்கி வருகிறது. வகுப்பறை கட்டடங்கள் இல்லாத பள்ளிகளுக்கு விரைவில் புதிய வகுப்பறைகள் கட்ட மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர்.இந்த நிலையில் தான் அறந்தாங்கி நகரை ஒட்டி உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூக்குடி கிராமத்தில் 1957ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியாக ஓட்டுக் கட்டடத்தில் தொடங்கி பிறகு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிக்கு கட்டிய வகுப்பறை கட்டடம் குறுகிய காலத்திலேயே சிதிலமடைந்து விட்டதால் கடந்த பல வருடங்களாக பள்ளியில் இருந்து அரை கி மீ தூரத்தில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் சமூதாயக் கூடம் முன்பு உள்ள மரத்தடியில் 6,7,8 வகுப்புகள் நடந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பிரேயர் முடிந்தும் மதிய உணவுக்கும் தொடக்கப்பள்ளி வளாகத்திற்குச் சென்று மீண்டும் சமுதாயக் கூடத்திற்கு திருப்ப வேண்டிய அவல நிலை இருந்தது. இந்த செய்தியை கடந்த 2022 ஜூன் 16 ந் தேதி நக்கீரன் இணையத்தில் “கிளாஸ் ரூம் இல்ல.. மரத்தடிக்கு மாறிய பள்ளிக்கூடம்! ஆபத்தான கட்டடங்களால் அலறும் பெற்றோர்கள்!” என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டிருந்தோம். நக்கீரன் இணைய செய்தியைத் தொடர்ந்து அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் பிறகும் மாணவர்கள் நெருக்கடியான ஓட்டுக்கட்டடத்தில் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் சேர்க்கையும் குறையத் தொடங்கியது.

இதனைப் பார்த்த முன்னாள் ஒன்றியக் கல்வி அலுவலர் (ஓய்வு) நடராஜன் பள்ளிக்குச் சென்று நான் படித்த பள்ளி இன்று இப்படி வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. நான் சிறுகச் சிறுக சேர்த்த பணம் இருக்கு தருகிறேன். உடனே வகுப்பறைகள் கட்டுங்கள் என்று சொல்ல உடனே பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தைக் கூட்டிய போது பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி கலந்து கொண்டு நடராஜன் அய்யா கொடுக்கும் ரூ.7 லட்சம் தொகையை நமக்கு நாமே திட்டத்தில் செலுத்தினால் அரசின் பங்குத் தொகையும் சேர்த்து ரூ.21 லட்சத்தில் கட்டடம் கட்டலாம். என்று கூறியதுடன் கல்வித்துறை அதிகாரிகளையும் பள்ளிக்கே அழைத்து நமக்கு நாமே திட்டத்திற்கான பங்குத் தொகையை ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி கொடுக்க அடுத்த சில மாதங்களில் ரூ. 21 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் கட்டடம் முன்பு ரூ. 80 ஆயிரம் செலவில் தகர செட்டும் அமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தன்னார்வ கொடையாளர்களை பாராட்டியதுடன் பள்ளி வளாகம், நடைபாதைக்கு பேவர் பிளாக் அமைக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் உறுதி அளித்துள்ளார். அதே போல, அதே பள்ளியில் படித்து சிங்கப்பூரில் பணியாற்றும் கொ.வெ. செந்தில்குமார் - அரசுப் பள்ளி ஆசிரியர் கொ.வெ. ஆறுமுகம் குடும்பத்தினர் தங்கள் பங்களிப்பும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று தானாக முன்வந்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 10 லட்சம் பங்குத் தொகை செலுத்தி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடம் கட்டி கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகத்தை அழைத்து திறந்து வைத்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.30 ட்சம் மதிப்பீட்டில் பக்கா கட்டிடமாக கலையரங்கம் கட்டும் பணியும் செய்து வருகின்றனர். மேலும் பள்ளியை சோலையாக்க வேண்டும் அதற்கு தேவையான பூங்கா அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தினரே தங்கள் அரசுப் பள்ளிக்கு இவ்வளவு செய்கிறார்களே என்று பாராட்டும் கிராம மக்கள் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கு என்ன தேவை என்று கேட்டு வருகின்றனர். அதே போல கிராம மக்கள் பள்ளி வளாகத்திற்கு முள்வேலி அமைத்துக் கொடுக்க சேகர் என்பவர் மாணவர்களின் சைக்கிள்கள் நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்துள்ளார். விரைவில் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மாட் வகுப்பறைகளாக மாற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளும் விரைந்து நடக்கும் என்கின்றனர். இத்தனை வசதிகளையும் நல்ல உள்ளங்கள் செய்து கொடுக்கிறார்கள். இதற்கு மதிப்பளிக்கு வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை திறன்மிக்கவர்களாக உருவாக்குவதில் அக்கறை செலுத்த வேண்டும். அது தான் கல்விக் கொடையாளர்களை மகிழ்விக்கும்.