
சென்னை தி.நகரில் பெட்ரோல் பங்கில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த காவலர் சக்திவேல் என்பவர் நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் அரசு வாகனத்திற்கு டீசல் நிரப்ப சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவலர் சாதாரண உடையில் இருந்துள்ளார். டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி வந்திருக்கிறார்.
அப்போது பெட்ரோல் போட காரில் வந்த நபர் காவலர் மீது மோதுவது போல் வந்ததாகக் கூறப்படுகிறது. சக்திவேல் அந்த நபரிடம் இது குறித்து கேட்ட பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் காரில் வந்த நபர் காரை நிறுத்திவிட்டு காவலர் சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த காட்சி பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இதில் காயமடைந்த காவலர் சக்திவேலை மீட்டு அங்கிருந்த ஊழியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் காவலர் சக்திவேல் புகார் கொடுத்ததை அடுத்து பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் தப்பிச் சென்ற அந்த நபரை தேடி வருகின்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.