Skip to main content

அன்புமணி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்?

Published on 29/05/2025 | Edited on 29/05/2025

 

 District secretaries meeting tomorrow under the leadership of Anbumani

பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் (நிறுவன) தலைவர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி (28.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ், கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை (ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன்) நியமித்து அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பை ராமதாஸ் அறிவித்து கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்த அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி குறுக்கிட்டு, ‘முகுந்தன் கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கு?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள்தான் நிர்வாகிகள். நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். பிடித்தால் இருங்கள்; இல்லையென்றால் விலகிக்கொள்ளுங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இதனைத் தொடர்ந்து அன்புமணி, “எனக்கு என்று தனியாக பனையூரில் அலுவலகம் இருக்கிறது. என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வாருங்கள்” என்று கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார்” எனப் பேசியிருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என அன்புமணியும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025) வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார்.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது கடந்த 16ஆம் தேதி (16.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் இன்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். மற்றொருபுறம் பாமக இளைஞர் அணியின் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகினார்.

 District secretaries meeting tomorrow under the leadership of Anbumani

இது தொடர்பாக அவர் அன்புமணிக்கு எழுதிய கடிதத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராகக் கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் (முகுந்தன்) நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அன்புமணி தலைமையில் நாளை (30.05.2025) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுடன் நாளை அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க இருப்பதாகவும், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ராமதாஸ் கடந்த 16ஆம் தேதி முதல் மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இளைஞர் அணி, மகளிர் அணி, ஊடக பிரிவு, சமூக நலப் பேரவை என 7 நாட்களாக ஒவ்வொரு அணியின் செயலாளரும், மாவட்ட நிர்வாகிகளும் என பல்வேறு அமைப்புகளை அழைத்து நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தினார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்