Skip to main content

“பா.ஜ.க.வின் அத்தனை பாவங்களுக்கும் அ.தி.மு.க உடந்தையாக இருந்துள்ளது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
CM Stalin says ADMK has been complicit in all the sins of BJP

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்தும், தேர்தல் பணிக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் தனது திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், ‘மத்திய பாஜக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ளனர். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலமாகத் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு இருக்கிறது. பா.ஜ.க - அதிமுக மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். 10 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் துரோகம், மோசடிகளை துண்டறிக்கையாக அச்சிட்டு வீடு வீடாகச் சென்று தர வேண்டும்.

தற்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்தது போலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அதிமுக. 10 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்து போனதை எடுத்துரைக்க வேண்டும். உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் அமைந்திட வேண்டும். பாசிதத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிட களத்தை அமைத்து தரும். உழவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள் ஆணி படுக்கைகளை போட்டிருக்கும் கொடூரம் நிகழ்ந்துள்ளது. விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறவில்லை. இதில் யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா? 

தேர்தல் பணிகளை விரைந்து தொடங்கிய இயக்கமாக தி.மு.க முன்னணியில் இருக்கிறது. தி.மு.க என்பது மாநிலக் கட்சிதானே என்று எள்ளி நகையாட நினைத்தவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் திமுகவை விமர்சித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடத்தும் பாஜகவை கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு.

திமுக எனும் பேரியக்கத்தால் பாஜக கட்சியின்  நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான். மோடி, அமித்ஷா, நட்டாவை தூங்க விடாம செய்கிறது திமுக. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமைகள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும், வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்