Skip to main content

“இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக..” - அமைச்சர் உதயநிதி

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
"BJP is the real enemy of Hindus." - Minister Udayanidhi

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சி நேற்று நடைபெற்றது. இதனை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (21ம் தேதி) காலை 9 மணிக்கு மாநாடு திடலுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி நிர்வாகிகளும் வந்தனர். பிறகு துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 100அடி உயர் கொடி கம்பத்தில், தி.மு.க. கொடியை ஏற்றி தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டை துவக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு துவங்கியது. இதில், மாநாட்டின் கொள்கை தீர்மானங்களின் சுருக்க வடிவத்தை உதயநிதி அறிவித்தார். அவர் தெரிவித்ததாவது; “இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த கழகத் தலைவருக்கு இளைஞர் அணியின் சார்பாக நன்றி. தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தொடர்ந்திட அயராது பாடுபடும் முதல்வருக்கு என்றும் இளைஞர் அணி துணை நிற்கும். மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பறித்துவரும் நிலையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற ஒப்பற்ற சிந்தனையுடன் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதலமைச்சர் எண்ணத்தின்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு  தொடர்ந்திட கழக இளைஞரணி அயராது பாடுபடும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது. 

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் அளித்ததன் மூலம் 2023 டிசம்பர் மாதம் வரை 44 கோடியே 6 லட்சம் முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாலின சமத்துவத்தை போற்றும் விடியல் திட்டத்தை வழங்கிய மாநில முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவிக்கின்றது. குடும்பத் தலைவியின் உழைப்பை மதிக்கும் வகையில் கலைஞரின் உரிமை திட்டத்தினை செயல்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு தலா மாதம் ரூபாய் ஆயிரம் கிடைக்க செய்து இது உதவித்தொகை அல்ல உங்களின் உரிமைத்தொகை என அறிவித்த முதலமைச்சருக்கு இளைஞர் அணி இந்த மாநாட்டில் நன்றி தெரிவிக்கின்றது.

மாணவர்களின் உடல் நலம் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவு திட்டம். இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை 31,000 தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவதற்கு காரணமான முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டத்திற்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் உயிர் காக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படுவதும், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக இரண்டு லட்சம் உயிர்களை காப்பாற்றிய மனிதநேய முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சி பொங்க வைத்த பொங்கல் பரிசு தொகுப்பு; தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்ற முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

வரலாறு காணாத மழையிலும் மக்களை காத்த முதலமைச்சருக்கு நன்றி. சென்னையிலும் சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களிலும், தென் தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய், வீடு, பயிர், கால்நடை, இழப்பீடுகள் என மொத்தம் ரூபாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்; நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு சிறப்பினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என முத்தமிழ் அறிஞர் புகழ்போற்றும் நிலையான அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ள முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. தங்கை அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து உயிர்களை பறிக்கின்ற நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி உண்ணா நிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர் அணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு நமது இலக்கு எனும் முழக்கத்துடன் இதுவரை 85 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துகளை பெற்று ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியுள்ள நிலையில், நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியாய் முழுமையாய் பெற்று தீரும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

குலக்கல்வியை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும். மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும். முதலமைச்சரே பல்கலைக்கழகத்தின் வேந்தர், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம். கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவை ஆக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம். நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம். இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என்பதை அம்பலப்படுத்துவோம். பாஜக ஆட்சியினை வீழ்த்திடும் முன் கள வீரர்களாக இளைஞரணி செயல்படும். நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை உள்ளிட்ட தீர்மானங்களை கொண்டுவந்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.