Skip to main content

அதிமுக உட்கட்சி தேர்தல்! தொண்டருக்கு அடி உதை!!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

ADMK party election... member has been beaten

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு. முதலமைச்சராக வருவதற்கு சசிகலா ஆசைப்பட, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது.

 

சிறைக்கு செல்வதற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும், கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரனையும் உருவாக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. இவருக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த தர்மயுத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓ.பி.எஸ். அவரது இணைப்புக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமிருந்தது.

 

ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த பதவிகளின் முறையே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டது.

 

இத்தகைய சட்ட திருத்தங்களை எதிர்த்து சசிகலாவும், முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த இரட்டைத் தலைமைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற, கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான் என்று உரிமை கோரி வருகிறார்.

 

இதனால், கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே உயிர்ப்பித்து அது வலிமையாகத் துவங்கியது. இந்த சிந்தனை வலிமையாவதை எடப்பாடி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை; விரும்பவில்லை. இதனையடுத்து, கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் பலனிளிக்கவில்லை.

 

அதேசமயம், ஓ.பி.எஸ்.சிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதரவாளர்கள், இரட்டை தலைமையை வலிமையாக்கும் வகையிலும், அந்த இரட்டைத் தலைமைக்கு அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையிலும் சட்டத்தை திருத்தம் வேண்டும் என வலியுறுத்தினர். முதலில் இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார்.

 

இதனையடுத்து டிசம்பர் 1ந் தேதி நடந்த செயற்குழுவில், கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஓட்டுப் பேட்டு தேந்தெடுப்பார்கள் என்றும், இந்த விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும், அந்த இரட்டைத் தலைமையை ஒற்றை வாக்கில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்தனர். அந்த திருத்தத்துக்கு செயற்குழு ஒப்புதல் தந்தது.

 

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட நிலையில், அதிமுகவின் உள்கட்சி தேர்தலை திடீரென ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் அறிவித்துவிட்டனர். கிளைக்கழகம் தொடங்கி, தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வரை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கான தேதியையும் அவசரம் அவசரமாக அறிவித்து விட்டனர்.

 

கட்சி தேர்தலில் எந்த ஒரு பதவிக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியிடுவதற்கான வேட்பு மணுவை இன்றும் (3.12.2021) நாளையும் கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொண்டு, நாளை (4.12.2021) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவித்தனர்.

 

அதனால் இன்று (3.12.2021) அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், யார் யாருக்கு படிவங்கள் தரலாம், யார் யாருக்கு தரப்படக் கூடாது என  சில ரகசிய உத்தரவுகளை தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி.

 

அந்த வகையில், வேட்பு மனுக்கள் விருப்பு வெறுப்புகளுடனேயே விநியோகிக்கப்பட்டன. பலருக்கும் விண்ணப்பங்கள் கிடைக்காமல் திரும்பினர். கட்சியின் உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும்; தற்போது வரை அந்த அட்டை புதுப்பித்திருக்க வேண்டும். அதனை காட்டி வேட்பு மனுவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், உறுப்பினர் அட்டை லைவில் இருந்தும் பலருக்கும் வேட்பு மனுக்கள் தராமல் மிரட்டி அனுப்பி வைத்தனர் அதிமுக நிர்வாகிகள். எதிர்த்துக் கேட்ட தொண்டர்களுக்கு அடி உதையும் விழுந்தது. உதாரணமாக, 1972 முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சென்னையைச் சேர்ந்த பிரசாத்சிங் என்பவர், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்பி, விண்ணப்பப் படிவம் பெற அதிமுக கழகம் வந்திருந்தார்.

 

முறைப்படி வேட்பு மனுவுக்கான கட்டணத்தை கட்டி விண்ணப்ப படிவம் கோரினார். ஆனால், அவருக்கு தரமுடியாது என தலைமைக் கழக நிர்வாகிகள் மறுத்தனர். அதனை எதிர்த்து கேள்வி கேட்டார். ஒருமையில் அவரை வெளியே போகச் சொல்லி மிரட்டினார். அதற்கும் அசராத அவர், நிர்வாகிகளிடம் நியாயம் கேட்க, அவரை அடித்து உதைத்து வெளியேற்றினர். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தூண்டுதலின் பேரிலேயே தன்னைத் தாக்கியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பிரசாத்சிங்.

 

கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் என்கிற நிலையில், விண்ணப்பப் படிவங்களை தராமல் மிரட்டுவதும் அடித்து உதைப்பதும் அதிமுகவில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும், நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும், தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்வோம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.