Skip to main content

"புதுச்சேரியில் உடற்பயிற்சி கூடங்களை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும்" -தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
tvk demands immediate release of gymnasiums in Pondicherry

 

புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

 

'புதுச்சேரி மாநிலத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து வணிகம், மதுக்கடைகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் முதல் படிப்படியாக வணிகம் உள்ளிட்ட  மற்ற துறைகள் அனைத்தையும் திறப்பதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது.  புதுச்சேரி மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன.  இந்த உடற்பயிற்சி கூடங்களை நம்பி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. கரோனா அச்சத்தின் காரணமாக புதுச்சேரி அரசால் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க இன்றுவரை அனுமதி வழங்காததால் 500-க்கும் மேற்ப ட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

கரோனா ஊரடங்கிலும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வளவு ஏன் மக்களின் பொருளாதாரத்தையும், உடல் நலனையும் பாதிக்க கூடிய மதுபானக்கடைகளைகூட திறக்க அனுமதித்துள்ளது. எனவே  புதுவை அரசு உடனடியாக உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும்.  புதுச்சேரியில் நான்கு மாத காலமாக உடற்பயிற்சி கூடங்கள் திறக்காததால் அதை  நடத்துகின்ற உரிமையாளர்கள் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத அவல நிலை நிலவுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறைக்கப்படுவதோடு சுவாச மண்டலம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக அமைகிறது.

 

மேலும் இதே நிலைமை நீடித்தால் பெரும்பான்மையான உடற்பயிற்சி கூடங்களை  விற்கக்கூடிய அவல நிலை உருவாகும். எனவே புதுச்சேரி அரசு உடனடியாக உடற்பயிற்சி கூடங்களை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். புதுவை அரசு அனுமதி வழங்காவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் திரட்டி, அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கின்றோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணிக்கிறேன்” - அதிமுக வேட்பாளர் ஆவேசம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"I will boycott the election" - AIADMK candidate's obsession

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதுவை அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்கிற்கு ரூ. 500, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் ரூ. 200 கொடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களை கொச்சைப்படுத்தும் தேர்தலாக மீண்டும் மாற்றி விட்டனர். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டிய தேர்தல். இந்த தேர்தல் அடுத்து வரும் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டிய ஒரு தேர்தல் ஆகும். மீண்டும், மீண்டும் பணம் கொடுத்துதான் வெற்றி பெறுவேன். மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றிகொண்டு தான் இருப்பேன் என்று நினைக்கிறார்கள். எனவே நான் இந்த தேர்தலை புறக்கணிக்கிறேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார். 

Next Story

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Election campaigning in Tamil Nadu ends with evening

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

அதே சமயம் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள 92 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.