
திருமணம் நடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன இளைஞர், கால்வாயில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஷ்வர் (32). நடன ஆசிரியரான இவர், நில அளவையராகவும் இருந்துள்ளார். இவருக்கும் வங்கி மேலாளர் சுஜாதா என்பவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே கடந்த கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த ஜூன் 17ஆம் தேதி தேஜஷ்வர் காணாமல் போயுள்ளார். இது குறித்து தேஜஷ்வர் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தேஜஷ்வரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில், கர்னூல் நகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள சுகாலிமெட்டு பகுதியில் கத்தி காயங்கள் மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
அந்த உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேஜஷ்வர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த தேஜஷ்வரின் குடும்பத்தினர், மரணத்தில் சந்தேகம் உள்ளதாகப் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தேஜஷ்வரின் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரது தாயா சுஜாதா ஆகியோர் சதித்திட்டம் தீட்டி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஐஸ்வர்யா ஏற்கெனவே தனது தாயார் பணியாற்றும் வங்கியில் ஊழியர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியாத தேஜஷ்வரின் குடும்பத்தினர், தேஜஷ்வருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, தேஜஷ்வர் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு, ஐஸ்வர்யா திடீரென காணாமல் போயுள்ளார். ஆனால், நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாகக் கூறி அடுத்த சில நாட்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும் தேஜஷ்வருக்கும் இடையே கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், ஐஸ்வர்யா யாருடனோ அடிக்கடி தொலைப்பேசி பேசிக் கொண்டிருந்ததையும், தன்னை விட்டு விலகிச் செல்வதையும் தேஜஷ்வர் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், நில அளவை செய்ய வேண்டும் என்று கூறி தேஜஷ்வரை ஒருவர் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் தேஜஷ்வர் மாயமாகியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், தான் காதலித்து வங்கி ஊழியருடன் சேர்ந்து ஐஸ்வர்யாவும் சுஜாதாவும், சதி திட்டம் தீட்டி தேஜஷ்வரை கொலை செய்துள்ளனர் என்று தேஜஷ்வரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். வங்கி ஊழியர் கொலையாளிகளை ஏற்பாடு செய்ததாகவும், கொலையாளிகள் நில அளவை தேவை என்று நடித்து தேஜஷ்வரை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்று கொலை செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
குடும்பத்தினர் வைத்த குற்றச்சாட்டில் அடிப்படையில், ஐஸ்வர்யா மற்றும் சுஜாதா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது ஐஸ்வர்யா மற்றும் சுஜாதா இருவரும் சதியில் தங்கள் பங்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாவுக்கும் வங்கி ஊழியருக்கும் இடையே 2,000க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் தலைமறைவாக இருக்கும் வங்கி ஊழியர் மற்றும் கொலையில் தொடர்புடைய பிற நபர்களையும் போலீசார் தீவிர தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அண்மையில் மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை மனைவியே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருமணமான ஒரு மாதத்திலேயே கணவரை மனைவி கொலை செய்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.