Skip to main content

பழங்குடியின சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை; திருட்டு பழியைச் சுமத்தி அரங்கேற்றிய கொடூரம்!

Published on 24/06/2025 | Edited on 24/06/2025

 

Tribal girl tortured with heat iron for theft suspicion andhra pradesh

மொபைல் போன் திருடியதாகக் கூறி பழங்குடியின சிறுமியை இரும்பு கம்பியால் சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காகர்லாடிப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கண்டலா செஞ்சம்மா என்ற 10 வயது சிறுமி. பெற்றோர் இருவரையும் இழந்த செஞ்சம்மா, தனது தாய்வழி அத்தையின் பராமரிப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் மொபைல் போன் திருடியதாக சில அண்டை வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று சிறுமி மறுத்த போதிலும் திருட்டை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறுமியை கொடூரமாகத் தாக்கி சூடான இரும்பு கம்பியைக் கொண்டு சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது துடித்துள்ளது. சிறுமியின் அழுகை சத்தத்தைக் கேட்ட கிராமத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது சிறுமியை உடல் ரீதியான நடத்திய தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில், சிறுமியின் அத்தை உள்பட அண்டை வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்