
விழுப்புரம் மாவட்டம் திருவண்ணைநல்லூரை அடுத்துள்ளது ஆணைவாரி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் இன்று (24.06.2025) காலை உணவை 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. அதாவது காலை உணவைச் சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரில் சென்று ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனியாகப் பரிசோதனை செய்து உரியச் சிகிச்சை அளித்தனர். அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் என உடல் உபாதைகள் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழந்தைகளுக்குப் பரிமாறப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த காலை உணவைத் தயாரித்த காலை உணவுத் திட்ட பணியாளர்களான சசிகலா, கலைச்செல்வி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.