
அரசு பள்ளியில் கூரை கசிவு ஏற்பட்டதால் வகுப்பில் மாணவர்கள் குடைகளைப் பிடித்து படித்துக் கொண்டிருக்கும் அவல நிலை மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் ஹூக்ளி என்ற பகுதியில் 1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் நான்கு வகுப்பறைகளில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த இரண்டு ஆண்டுகளில் இடிந்து விழுந்துள்ளன. மூன்று அறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன, அவை கூட மோசமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 1 வார காலமாக கனமழை பெய்து வருகிறது. அதனால், இந்த தொடக்கப்பள்ளியில் கூரை கசிவு ஏற்பட்டு மழை நீர் வகுப்பில் வகுப்பிலேயே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பின் போது குடைகளைப் பிடித்துக்கொண்டே பாடம் படித்து வருகின்றனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலை மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. தொகுதி மேம்பாட்டு அதிகாரி (BDO) எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை’ என்று வேதனையோடு தெரிவித்தார்.