Skip to main content

"பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவது நமது கடமை" - மத்திய அரசை வலியுறுத்தும் மம்தா...

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

mamata about jee and neet

 

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.

 

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் கரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே தெரிவித்தார். இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "கரோனா பரவல் நேரத்தில் நீட்,. ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடும். மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவது நமது கடமை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்