Skip to main content

ஒன்றரை மாத பெண்குழந்தையை கொன்ற தந்தை... ஜோதிடரின் பேச்சால் நடந்த விபரீதம்...

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தையை ஜோதிடர் பேச்சை கேட்டு பெற்ற தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

 

karnataka father acts on astrologer advice

 

 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு அருகே வசித்து வரும் மஞ்சுநாத், சுப்ரீத்தா தம்பதியினருக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. நிஹாரிகா என்ற அந்த குழந்தையால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் என ஒரு ஜோசியர் சொல்லிய நிலையில், இதனால் மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சுப்ரீத்தா குழந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த குழந்தை குறித்து தன் கணவர் மஞ்சுநாத்திடம் கூறிய போது, அவர் ஒன்றும் தெரியாததுபோல் இருந்துள்ளார். மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்த போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தை மரணம் சந்தேகிக்க தக்க வகையில் இருப்பதால், போலீசில் புகார் அளிக்குமாறும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் காவல்துறைக்கு தகவல் கொடுக்க கூடாது என்றும் மஞ்சுநாத் எச்சரித்ததாக தெரிகிறது. அதுமட்டுமல்லாது, குழந்தையை அவசர அவசரமாக தகனம் செய்துள்ளார். கணவர் மீது சந்தேகமடைந்த சுப்ரீத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலிஸ் விசாரணையில் குற்றத்தை மஞ்சுநாத் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பெண் குழந்தையால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் என்று ஜோதிடர் கூறியதை கேட்டு கொலை செய்ததாக தந்தை மஞ்சுநாத் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை கொலை செய்ய சொன்ன ஜோதிடரை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்