Skip to main content

ஆசையாகப் பந்தை எடுத்த பட்டியலின சிறுவன்; விரல் வெட்டப்பட்ட கொடூரம்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

gujarat children cricket ball touch and finger incident

 

குஜராத்தில் உள்ள பதான் மாவட்டத்தில் ககோஷி என்ற கிராமம் உள்ளது. இங்கு சில தினங்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஓடிச்சென்று அந்த பந்தை எடுத்துக் கொடுத்துள்ளான்.

 

இந்த சிறுவனின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்த பேட்டிங் செய்த சிறுவன், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த நீ எப்படி நான் அடித்த பந்தை தொடலாம் எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளான். மேலும் பந்தை எடுத்துக் கொடுத்த சிறுவனின் ஜாதி பெயரைச் சொல்லி கடுமையாகத் திட்டியுள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டியலின சிறுவனின் மாமா தீரஜ் பார்மர் என்பவர் அங்கு வந்து சாதியைச் சொல்லித் திட்டிய சிறுவனைக் கடுமையாகக் கண்டித்து விட்டு பந்தை எடுத்துக் கொடுத்த சிறுவனை கையோடு அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

 

அன்று இரவு 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் தீரஜ் பார்மரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரைத் தாக்கத் தொடங்கி உள்ளனர். அப்போது இதனைத் தடுக்க தீரஜின் தம்பியான கீர்த்தி என்பவர் முயன்றபோது அவரையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கி உள்ளது. இதையடுத்து அவரைப் பிடித்து அவரது கட்டை விரலைத் துண்டாக வெட்டியது. அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்