Skip to main content

'வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது' - நிர்மலா சீதாராமன் பேட்டி

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
9 helicopters; 42,290 people rescued'-Nirmala Sitharaman interview

டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,''தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. மத்திய அரசை சேர்ந்த எல்லா துறைகளும் ஒத்துழைத்து உடனடியாக எல்லாரும் சேர்ந்து களத்தில் இறங்கினார்கள். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கேயே தவித்துக் கொண்டிருந்தார்கள். முன்னவும் போக முடியல, பின்னவும் போக முடியல என்ற நிலைமை இருந்தது. அந்த ரயில் நிலையத்திலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பயணிகளை ரயில்வே சார்பில் சிறப்புப் பேருந்து வசதி கொடுத்து அவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டார்கள். அதைத் தவிர 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ரயில்வே, மற்ற எல்லா துறைகளுடன் சேர்ந்து நல்ல விதமாக, சமயத்தில் உதவி செய்தார்கள்.

உள்துறை அமைச்சகத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் இருக்கின்றது. அந்த இரண்டும் தென் மாநிலங்களின் நிலையை 24 மணி நேரமும் மானிட்டர் செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருவதால், மேலும் தென் மாவட்டங்களுக்கு போக வேண்டிய உதவிகளை தொடர்ந்து இன்னொரு முறை யாரும் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு உடனுக்குடனே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ஏர்போர்சின் ஐந்து ஹெலிகாப்டர்கள், நேவியை சேர்ந்த ஆறு ஹெலிகாப்டர்கள், கோஸ்ட் கார்டை சேர்ந்த ஒரு ஹெலிகாப்டர் என மொத்தம் ஒன்பது ஹெலிகாப்டர்கள் மூலம் 42 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் மாநில அரசால் மீட்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அந்த 9 ஹெலிகாப்டர்கள் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வரைக்கும் ஒவ்வொரு ஹெலிகாப்டரும் 70 முறை சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

மத்திய அரசு செய்து கொண்டே இருக்கும். ஆனால் மாநில அரசு இதுபோன்ற நான்கு கேள்விகளை புகுத்திவிட்டு எங்களிடம் கேட்க சொல்லி போய்க் கொண்டே இருப்பார்கள். அதற்கு நாங்கள் பதில் கொடுக்கணும். பணம் மாத்திரம் கொடுக்கும். எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறோம். இன்னைக்கும் கொடுக்கிறோம். என்ன நடந்துச்சு. ஒரு ரயில்வே லைனுக்கு கீழ கட்டின பாலத்திற்குள் கீழே தண்ணீர் திரும்பி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுக்குள் வருது. அதற்கு மத்திய அரசு பொறுப்பா? அங்குள்ள தொழில்துறையில் இருப்பவர்களை போய் கேளுங்கள்.

மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை''என்றார். 

சார்ந்த செய்திகள்