Skip to main content

’அர்ச்சகர்கள் ரோபோவாக இருக்கின்றனர்’ - ஐகோர்ட்  கடுமையான விமர்சனம்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
hc

 

மயிலாப்பூர் கோவில் சிலை கடத்தல் தொடர்பான புதிய வழக்கில், ‘’ அர்ச்சகர்கள் பக்தியுடன் இல்லாமல் ரோபோவாக உள்ளனர்’’ என்று நீதிபதிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

 

   ‘’சென்னை மயிலாப்பூர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் வாயில் பூவுடன் மயில் சிலை இருந்தது. ஆனால் தற்போது இருக்கின்ற மயில் சிலையில் வாயில் பாம்பு இருக்கின்றது.  இது ஆகம விதிகளுக்கு எதிரானது.  ஆகவே, காணாமல் போன மயில் சிலைக்கு பதில் புதிய சிலையை அமைத்துவிட்டு மீண்டும் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் ’’ என்று திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

 


விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள்,  ‘’கோயில் சிலைகள் காணாமல் போவது அர்ச்சர்கள் பணியில் அர்ப்பணிப்புடன் இல்லை என்பதை காட்டுகிறது.   கோவிலில் உள்ள சிலைகளுடன் அதிக தொடர்பு உள்ளது அர்ச்சகர்கள்தான்.  அவர்கள்தான் தினமும் அருகில் இருந்து கவனிக்கிறார்கள்.  அவர்கள் சிலைகள் காணாமல் போய்விட்டால் உடனடியாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது   கடமை.  அதே போல் காணாமல் போன சிலைகளூக்கு பதிலாக புதிய வைத்தால் அது முன்பு உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டதுதானா என்று அவர்கள்தான் கவனிக்க வேண்டும்.  தெய்வீகமாக தனது பணியை செய்தால் அவர்களால் கண்டுபிடிக்க முடியும்.  ஆனால அர்ச்சகர்கள் தெய்வீகமாக அவர்களது பணியைச்செய்வது இல்லை.  பக்தியுடன் இல்லாமல் அர்ச்சகர்கள் ரோபோவாக உள்ளனர்’’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.  

மேலும்,  இந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்