
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் கல்ந்து கொண்டுள்ளனர். அதேபோன்று நார்வே நாட்டைச் சேர்ந்தவரும் 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் நேற்று (01.06.2025) நடந்த போட்டியில் குகேஷ், கார்ல்சன் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார். அதே சமயம் இந்த போட்டியில் தோல்வியைச் சந்தித்த கார்ல்சன் போட்டியில் கலந்து கொண்ட மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். அந்த வகையில் கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட வெறும் ஒரு புள்ளிகள் மட்டுமே குகேஷ் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செஸ் வீரர் குகேஷை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நார்வே செஸ் கிளாசிக்கல் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷுக்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் அவரது குறிப்பிடத்தக்க பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட மைல்கல். உலக சதுரங்கத்தில் இந்தியாவின் நிலையான எழுச்சியில் மற்றொரு திடமான படி” எனக் குறிப்பிட்டுள்ளார்.