Skip to main content

ஆட்சி இருக்கையை எங்கு தவற விடுகிறது பா.ம.க.?

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

Where does the PMK miss the ruling seat?

 

ஒரு அரசு நிகழ்ச்சி, ஒரு அரசியல் நிகழ்ச்சி. சில மணிநேர இடைவெளியில் நடந்த இந்த இரண்டும், இருவேறு விதமான கருத்துகளையும், இரு தலைவர்களின் வெவ்வேறு இலக்குகளையும் நமக்கு புலப்படுத்திக் காட்டுகிறது.

 

கோவையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவதுதான் என் லட்சியம்; என் அரசு கடைசிவரை இதை கடைப்பிடிக்கும்” என்று பேசினார்.

 

திண்டிவனத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானுார் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், “செஞ்சி நமது கோட்டை.. ஆனால் கோட்டைவிட்டு உட்கார்ந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லை என்கிறீர்கள். வேட்பாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வேலை செய்யாமல் எதிர்க் கட்சிக்கு வேலை செய்கிறீர்கள். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள்” என்று பேசினார். அதிலும், சில இடங்களில் கடும் காட்டமாகவும் பேசியிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் சொற்களின் உச்சரிப்பும், குரல் அழுத்தமும், கட்சிதான் அனைத்தும் என காத்திருக்கும் தொண்டர்களுக்கு மனதின் ஓரத்தில் ஒரு நெருடலை உருவாக்கலாம். அந்த வகையில்தான் அப்பேச்சு அமைந்திருந்தது.

 

அதேபோல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள். மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா? என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்” என பேசினார்.

 

இப்படி மூன்று தசாப்தங்களாக அரசு அரியணையை எட்டிப்பிடிக்க முயன்றுவரும் பாமகவை, அதன் இலக்கை அடையவிடாமல் தடுப்பது என்ன..? பாமக கவனிக்க தவறியதும், கவனிக்க மறுப்பதும் என்ன..? "கட்சியில் வேட்பாளர்கள் கூட இல்லையா" என நிர்வாகிகளிடம் தலைவர் காட்டமாக கேட்குமளவுக்கு அக்கட்சியை கொண்டு சென்றது எது..? 

 

பாமகவின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அது ஒரு சமூகத்திற்கான கட்சி என்பது. ஆனால், அதே கட்சிதான் ஏழுமலை எனும் தலித்தை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஆக்கியது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகளை நிறுவியதற்கு காரணமாக இருந்தார். இப்படி தங்கள் மீதான சாதிய ரீதியிலான பிம்பங்களை உடைத்தெறிய அக்கட்சி தொடர்ந்து முனைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆனாலும், பொது ஜனத்திற்கான கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள பாமக எடுத்த முயற்சிகளையும் கடந்து, அது சமூகத்தின் ஒரு சாராருக்கான கட்சிதானோ என்ற சந்தேகத்தை அவ்வப்போது நிகழும் சில அழுத்தமான சம்பவங்கள் மக்களுக்கு எழுப்பிக்கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது எனலாம்.  

 

பெரியாரின் இயக்க அரசியலிலிருந்து, வாக்கு அரசியலுக்கு அண்ணா தனது பாதையை மாற்றியபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். தி.க.விற்கும், தி.மு.க.விற்குமான ஒரு பெரும் வித்தியாசம் அது. ஒரு தலைமையின் கீழ் நாங்கள் இயங்குகிறோம், இந்தத் தலைமை எங்களை வழிநடத்தட்டுமென மக்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு எடுக்கும்போது, அந்த இயக்கமும், அதனை வழிநடத்தும் தலைமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்திற்காகவும் இயங்க வேண்டும் என்பது அவசியமாகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அது செயல்படுதல் வேண்டும்.

 

வாக்கு அரசியலுக்கு வந்த திமுகவும், அதிமுகவும் அதனைத் தான் செய்தன. அதுவே ஆளும் இருக்கைக்கான பாதையை அக்கட்சிகளுக்கு அமைத்துக்கொடுத்தது. ஒரு விஷயமோ, ஒரு கூட்டமோ இறுதிவரையில் மாறாமல், அது நமக்கானதாகவே இருக்கும் எனக் கருதி செயலாற்றுவது என்பது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மனநிலையையே வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

கட்சியைத் துவக்கி 30 ஆண்டுகள் கடந்து தொடர்ந்து செயலாற்றி வரும் எந்த ஒரு தலைவருக்கும் இருக்கும் அடிப்படையான ஆதங்கம்தான் தலைமை இடத்திற்கு வர முடியவில்லையே என்பது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்து நகர்ந்து செல்லும்போது அது மற்ற சாரார் மனதில் ஒருவித பாதுகாப்பின்மையை உருவாக்கும். இங்குதான் அண்ணா தனது கட்சிக்காரர்களை தம்பிகளாக்கி, தம்பிகளுக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரகசியத்தை கற்றுக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தை திமுக வசமாக்குகிறார். அதன் நீட்சியையே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்துகிறார் எனலாம்.

 

குறிப்பாக ராமதாஸ், “தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி நாம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என கட்சியினர் சொல்கின்றனர்” என்று சொல்லி வேதனைப்படுகிறார். ஆனால், மாற்றம் வேண்டி பல இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏன் பாமகவின் பக்கம் வர மறுக்கிறார்கள், அவர்களை எப்படி தங்கள் பக்கம் ஈர்ப்பது என பாமக சிந்தித்து பார்க்க வேண்டியது அவர்களுக்கு காலத்தின் கட்டாயமாகியுள்ளது. 

 

பாமக துவங்கிய காலத்தில் பெரும் மக்கள் திரளை அந்தக் கட்சியின் பக்கம் ஈர்த்தது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் போராட்டமும், கள அரசியலும்தான். ஆனால், இன்று அன்புமணியின் கள போராட்டமும், அரசியலும் கேள்விக்குள்ளாக்கும் தருணத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரின் மாநிலங்களவை செயல்பாடுகளும், வருகை பதிவும் அவரின் அரசியல் தீவிரத்தை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.

 

நம் பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் நமது இருக்கையின் மறு இருக்கையில் இருப்பவன் சக மனிதன் என இந்தத் தலைமுறையின் பெரும் பங்கினர் மாறிவர. அதனை முழுதாக ஏற்காமல், ‘நாடகக் காதல்’, ‘மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா’ என்பன போன்ற சொல்லாடல்களை கட்சியின் மையமாக வைத்து நகர்த்த நினைப்பதும், 1987ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், மதுவுக்கு எதிரான போராட்டம், 2020ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டமின்றி, மற்ற மக்கள் பிரச்சனைக்காக வீதிகளில் இறங்கி நின்று அது எந்த அளவிற்கு சென்றுள்ளது, அது எங்கு தடைப்பட்டுள்ளது என்பனவற்றை ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது எனலாம்.

 

 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.