Skip to main content

விஷமான ஆறு, அமில மழை, சகதி நீர்... ஜாம்பியாவில் ஸ்டெர்லைட்!

Published on 06/04/2018 | Edited on 23/05/2018

வேதாந்தா நேச்சுரல் ரிசோர்சஸ், அதாங்க, நம்ம ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் நிறுவனம், உலகமெங்கும் உலோகம், இயற்கை கனிமங்கள் சார்ந்து செயல்பட்டு வரும் ஒரு பணக்கார நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் அனில் அகர்வால். பீஹார் மாநிலத்தில் பிறந்த சாதாரண இந்திய குடிமகன். தற்போது இவரது நிறுவனத்தின் தலைமையிடமோ லண்டனில் இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு போன்றவற்றையும் பூமியில் இருந்து எடுத்து பிரிக்கிறது. இவர்களின் முக்கிய பொருட்களாக இருப்பது தாமிரம், ஜிங்க், அலுமினியம், லெட் மற்றும் பெட்ரோலியம் ஆகும். 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட  இவரது  நிறுவன சாம்ராஜ்யம் இன்று வரை வளர்ந்துகொண்டே இருக்கிறது. 
 

KCM factory zambia



இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தால் என்ன பாதிப்புகள் எல்லாம் நேர்கிறது என்பதை ஊர் அறிந்துவிட்டது. இருந்தாலும் அரசுகளும், சில அறிவாளிகளும் மட்டும் இதை மறுத்தே வருகின்றனர். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஏற்படும் நச்சு புகை கழிவையும்  காற்றை மாசுபாட்டையும் தூத்துக்குடியில் கார், பைக் புகையினால் தான் இப்படி ஆகிறது என்னும் அளவுக்கு போகிற போக்கில் சொல்கின்றனர். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இருக்கிறது, இங்கு தமிழகத்தில் மட்டும் தான் இதற்கு எதிர்ப்பும், மக்கள் குறைகள் சொல்வதும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

 

 


ஜாம்பியா நாட்டில் சிங்கோலா என்னும் ஊரில்தான் ஆப்பிரிக்க கண்டத்திலேயே தாமிர சுரங்கம் மிகவும் பெரிதாக இருக்கிறது, தாமிரமும் அதிகம் எடுக்கப்படுகிறது. அங்கு கான்கோலா காப்பர் மைன்ஸ் என்ற பெயரில் இயங்குகிறது வேதாந்தாவின் ஆலை. இந்த ஊர் மக்கள், 'எங்கள் ஊரில் வந்து பாருங்கள் மாசு என்ற ஒன்றை சுவாசிப்பீர்கள், சுவைப்பீர்கள்' என்கின்றனர். சுரங்கம் பக்கத்தில் ஊர் மக்களுக்கு என்று ஒரு தண்ணீர் குழாய் உள்ளது. அதிலிருந்து வரும் நீர் பார்க்க குடிக்கும் நீர் போன்றே இருக்காது. வெள்ளத்தில் சேற்றை வாரிக்கொண்டு வரும் சகதி போன்ற அந்த நீர் இருக்கும், அதையே குடித்துப் பார்த்தால் அமில வாடையை கொண்டிருக்கும், அது நீர் இல்லை அமிலம் தான் "சல்பர் டை ஆக்சைட்" கலந்து வருகிறது. மனிதனுக்கு நீர் என்பது இன்றிமையாத  ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த அருவெறுக்க தக்க நீரை குடிக்கும் போது நீரே வேண்டாம் என்று நமக்குள் தோன்றிவிடும்.

  KCM polluting water



சரி, ஆள்துளை நீரில் தான் இப்படி அமிலம் கலந்துவிட்டது என்று பார்த்தால், அங்குள்ள காஃபூ ஆற்றிலும் அமிலம் கலந்து அமிலநீராக அதுவும் மாறியது. ஆற்றிலிருந்து சூரியனின் மூலம் ஆவியாகி, பின்னர் அந்த ஆவி மேலே சென்று மேகமாகி. அது குளிரும் போது மழையாக பொழியும். அதுதான் இயற்கை, அதுபோன்றுதான் இங்கும் நடக்கிறது. அமிலமாக இருக்கும் நீரோடைகளால் மழையும் அமிலமாக பொழிகிறது. இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு புகையினால் காற்றிலும் அமிலம் கலந்திருக்கிறது. இது அனைத்திற்கும் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


வேதாந்தாவால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தாமிர சுரங்கமும் தாமிர சுத்திகரிப்பு தொழிற்சாலை தான் இதற்கு காரணம் என்று அந்த மக்களும் தெரிவிக்கின்றனர். கனடாவில் இருந்து வந்த ஒரு ஆய்வுக் குழுவும் தெரிவிக்கிறது. பஞ்ச பூதங்கள் அனைத்தும் பாதிப்படைந்திருக்கிறது. நிலத்தில் அறுவடை செய்த பயிர்களும் வாடிவிட்டது, சோளமும் மக்கி விட்டது. நிலமும் ரசாயன  பொருட்களால் அவதிப்பட்டு அதற்கும் மனிதனை போல நோய் தொற்றியிருக்கிறது. ஆற்றில் இருக்கும் மீனை சாப்பிட்டால், அதை சாப்பிட்டவர்களின் உடல்நிலைக்கு பங்கம் வந்துவிடுகிறது.  நாற்பது வருடமாக இயங்கி வரும் இந்தத் தாமிர சுரங்கம், அந்த ஊர் சுற்றுப்புற சூழலை அழித்து வந்திருக்கிறது.  

  KCM march zambia



அவர்களும் சட்டத்தை நம்பி லண்டன் நீதிமன்றத்தில் போராடித்தான் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் பல தொழிற்சாலைகள் வைத்திருக்கும் வேதாந்தா பழங்குடி மக்களும், கிராம மக்களும் தங்களின் நிலப்பரப்பை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தாக்கத்தை சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்துகிறது. இப்படி சென்ற இடமெல்லாம் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இத்தகைய ஆலைகளும் அவற்றின் நிர்வாகங்களும் மிகுந்த கவனத்தோடும் கண்டிப்போடும் கையாளப்பட வேண்டியவை. ஆனால், நம் ஆட்சியாளர்களின் கவனம் என்று மக்கள் நலன் மீது இருந்திருக்கிறது? 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.