Skip to main content

"தங்கமணிக்கு உடம்பெல்லாம் மூளை... ஆயிரம் சோதனை நடத்தினாலும் டிவிஏசி-ஐ திணறடிக்கும் திறமை அவருக்கு உண்டு.." - ரெய்டு பற்றி புகழேந்தி பேட்டி!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

iop

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பான வழக்கிலிருந்து அதிமுக தலைமை தப்பித்த நிலையில், அதிமுக முன்னணியினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்துள்ளது. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வீரமணி, சி. விஜயபாஸ்கர், வேலுமணி என்று அடுத்தடுத்த பிரபலங்களை நோக்கி பாய்ந்தது. உச்சகட்டமாக எடப்பாடி பழனிசாமியின் மிக முக்கிய தளபதியாக இருக்கும் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 69 இடங்களில் அதிகாரிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று (15.12.2021) சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை, எல்லாம் பொய் என்று நேற்று இரவு செய்தியாளர்களிடம் ஆவேசம் காட்டினார் தங்கமணி. இந்நிலையில், தங்கமணியிடம் நடைபெற்ற சோதனை குறித்து அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முழுவதும் சோதனை நடத்தி முடித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

சோதனையில் அங்கிருந்து என்ன கைப்பற்றினார்கள் என்று முதலில் பார்க்க வேண்டும். நீங்கள் தங்கமணியை சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒரு டிவிஏசி அல்லை, ஆயிரம் டிவிஏசி வந்தாலும் அவர் சமாளிப்பார். லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனையோ வழக்குகளைப் பார்த்திருந்தாலும், தங்கமணி வழக்கை மட்டும் அவர்கள் வெற்றிகொண்டால் அது மிகப்பெரிய ஆச்சரியம்தான். சிலருக்கு உடம்பெல்லாம் மூளை என்று கிண்டலாகக் கூறுவார்கள். அது தங்கமணிக்கு நூறு சதவீதம் உண்மை. அவருக்கு உடம்பு முழுவதும் மூளை. அவர் அமைதியை வைத்துக்கொண்டு சாதாரணமாக நினைக்கக் கூடாது, வித்தைக்காரர். அதுவும் நிறைய மாதங்கள் கடந்து இப்போதுதான் அங்கே லஞ்ச ஒழிப்புத்துறை சென்றுள்ளதால் இந்த விவகாரத்தில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

எனவே எடப்பாடி பழனிசாமி கொள்ளைக் கூட்டத்தின் தளபதியாக இதுவரை இருந்துவந்தவர்தான் இந்த தங்கமணி. இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், தங்கமணி மிக ஜாக்கிரதையான ஆள். என்ன செய்தால் தப்பிக்கலாம், எப்படி செய்தால் மாட்டாமல் இருக்கலாம் என்ற அரசியல் மூலமே அவருக்கு அத்துப்படி. எனவே இப்போது அவர் மீது கை வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே திணறக் கூட வாய்ப்புண்டு. சாதாரண ஆள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் போடவில்லை. இது அவர்களுக்கு சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். இடைவெளி அதிகம் கொடுத்தது தங்கமணிக்கு மிக வசதியாக மாறியிருக்கும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும், யார் வெற்றிபெறுகிறார்கள் என்று. எது எப்படி இருந்தாலும் லஞ்ச போலீசாருக்கு இது கடினமான காரியமாகத்தான் இருக்கும்.

 

இந்த விவகாரத்தில் அதிமுக எழுச்சியைப் பார்த்து திமுக பயப்படுவதாகவும், அதனால்தான் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் அதிமுகவில் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதில்லை. தற்போது விருப்பமனு வாங்க வந்தவர்கள் மீது அடிதடி தாக்குதலும் நடைபெறுகிறது. இதைத்தான் இவர்கள் எழுச்சி என்று கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த ரவுடி ராஜ்ஜியத்தைத்தான் அவர்கள் பெருமையாக கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒன்றையாவது இவர்கள் சரியாக செய்திருக்கிறார்களா? அம்மாவுடைய வீட்டை நினைவு இல்லமாக மாற்றினார்கள், அது என்ன ஆனது? இப்போது கடையை மூடிவிட்டார்கள். 10.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தார்கள், அது இப்போது நடுத்தெருவில் நிற்கிறது. இவர்கள் கொண்டுவந்தது என்ன சிறப்பாக இருக்கிறது, இவர்கள் பெருமைப்படுவதற்கு. எதுவும் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீத இடங்களில் தோல்வி, என்ன எழுச்சி என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரிவில்லை. உட்கட்சித் தேர்தலில் போட்டியிட வந்தவர்களைக் குண்டர்களை வைத்து அடித்து துவைத்து இவர்கள் தலைமைப் பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளார்கள். இதுதான் இவர்கள் எழுச்சி என்று கூறுகிறார்கள். இதனால் அடிமட்ட தொண்டனுக்கு என்ன வந்துவிடப் போகிறது. அவன் தெருவில் அடிவாங்கிக்கொண்டுதானே நின்றுகொண்டிருக்கிறான். உண்மையை யாராவது கேட்டால், உள்ளாட்சித் தேர்தலில் எங்களைப் பணியாற்ற விடமால் தடுக்கிறார்கள் என்று இதுவரை கூறிவந்தவர்கள் தற்போது, அதிமுக ஏற்கனவே அறிவித்த போராட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள் என்று உப்புசப்பில்லாத காரணத்தைக் கூறுகிறார்கள். அதிமுகவில் 72 மாவட்டங்கள் இருக்கிறது. ரெய்டு நடக்கும் இடத்திற்கு எம்எல்ஏக்களுக்கு என்ன வேலை. அப்படி வருபவர்கள் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று கூறி வழக்குப்போட்டால் யாராவது அங்கே வருவார்களா? போராட்டம் நடத்த துப்பில்லாத இவர்கள், அரசு அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சப்பை கட்டு கட்டுகிறார்கள். தங்கமணி மட்டுமல்ல இன்னும் பல மணிகள் அதிமுகவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.