Skip to main content

செல்போன் அடிமைத்தனம்! - மாட்டிக்கொள்ளும் மாணவர் உலகம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Students stuck with cellphones

 

‘18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது, 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு விற்க முடியாது..’ என விதிமுறைகள் இருந்தும் நம் கண்ணெதிரே அப்பட்டமாக மீறப்படுகிறது. 

 

கரோனா பரவல் காலத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் படிப்பதற்கு, 18 வயதுக்குக் கீழுள்ள மாணவர்கள், தங்கள் கையில் செல்போன் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..’ எனச் சொல்வதுபோல், திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்ததுபோல், ஏற்கனவே படிப்புச் சுமையால் மன அழுத்தத்தில் உள்ள மாணவர்கள், படிப்பைக் காட்டிலும் வேறு பொழுதுபோக்கு விஷயங்களுக்காக செல்போனைப் பயன்படுத்துவதற்கு, நாமே இன்னொரு வழியைத்  திறந்துவிட்டதுபோல் ஆயிற்று. 

 

இதன் விளைவு, செல்போனில் கேம் விளையாடுவது, பொழுதுபோக்கு செயலிகளுக்கு அடிமையாவது என மாணவர்களை ஒருவித மாயையில் சிக்க வைத்தது. முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ‘பழகி’ விபரீதங்களில் சிக்கியதும் நடந்துள்ளன. விருதுநகர் பாலியல் வழக்கிலும் செல்போனால் மூன்று சிறுவர்கள் கைதாகி, கூர்நோக்கு இல்லத்தில் அடைபட்டதும் நடந்திருக்கிறது. 

 

தனக்கென்று ஒரு செல்போன் இல்லையென்றால், உயிர் வாழவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தற்கொலையில் உயிரைவிட்ட சம்பவங்களும் நடந்தபடியே உள்ளன. திருவனந்தபுரத்தில் ஜீவா மோகன் என்ற 11-ஆம் வகுப்பு மாணவி ‘நான் மொபைலுக்கு அடிமையாகிவிட்டேன். இதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்.’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது. 

 

உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்பும்கூட செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. குறிப்பாக, செல்போனிலிருந்து வெளிவரும் ரேடியேசன் அதிகமாகச் சூட்டை ஏற்படுத்தி, மூளை, காது, இதயம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கண்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணுகிறது. கைவிரல் தசைநார் பாதிப்பு, நினைவாற்றல் பாதிப்பு, தூக்கமின்மை எனப் பாதிப்புகள் என்னவோ, வரிசைகட்டி மிரட்டவே செய்கின்றன.

    
கட்டுப்பாடற்ற செல்போன் பயன்பாட்டால், உலகில் குற்றங்களும், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பதும், விழிப்புணர்வற்ற மரணங்களும் தொடர்ந்தபடியே இருக்க, பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், ‘18 வயதிற்குக் கீழுள்ள மாணவ, மாணவியருக்கு செல்போன் ரீசார்ஜோ, சர்வீஸோ செய்து தரமாட்டோம் எனப் பொதுநலனைக் கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியேஷன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியது ஆறுதலளிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாகப் பேசப்படுகிறது. 


குடும்ப வட்டாரத்திலோ, நட்பு வட்டத்திலோ, செல்போன் பயன்பாட்டிற்கு தானும் அடிமையாகாமல், பிறரையும் அடிமையாகவிடாமல் பாதுகாக்கும் முயற்சி, ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு பழக்கத்தையும் ஜன்னல் வழியாக உடனே தூக்கி எறிந்துவிட முடியாது. அப்படியென்றால், இதுபோன்ற பழக்கங்களில் இருந்து மீளவே முடியாதா? 


டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்; ‘தான் ஒரு பழக்கத்துக்கு அடிமை என்பதையும், அதனால் வரும் தீமையையும், ஒருவரை உள்ளார்ந்து உணரச் செய்துவிட்டால், அவர் தானாகவே அந்தப் பழக்கத்திலிருந்து  மீண்டுவர வாய்ப்பு உண்டு’


தேவைக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே! செல்போனின் தீவிரப் பிடியிலிருந்து தங்களை மீட்க வேண்டியவர்கள் அனேகம்பேர்! 

 

 

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.