Skip to main content

பிரதமர்-கவர்னர் சந்திப்பு!  பதட்டத்தில் எடப்பாடி!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

                                

modi


 

பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து விவாதித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! இந்த சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் ஏகத்துக்கும் பதட்டம் தெரிகிறது. 

 

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டுவதற்கான திட்ட வரையறைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முடிவை கண்டிக்கும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானத்தை கடந்த 6-ந்தேதி நிறைவேற்றியது எடப்பாடி அரசு.
 


மத்திய மோடி அரசை நேரடியாக பகைத்துக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை முதல்வர் எடப்பாடி. ஏன், கடிதம் கூட கண்டித்து எழுதப்பட்டதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கர்நாடக அரசு கட்டத்துடிக்கும் மேகதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உடனடியாக இந்த தீர்மானம் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

 

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (7-ந் தேதி) பிற்பகலில் டெல்லிக்கு விரைந்து பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். 

 

அவரது டெல்லி பயணம் குறித்து விசாரித்தபோது, ’’ மோடி அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானமாகட்டும், எழுதப்படும் கடிதமாகட்டும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இது வரை வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. முதன்முறையாக கண்டன வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனை மத்திய அரசு ஜீரணிக்கவில்லை. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி, மோடியை சந்தித்து வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகளிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், மத்திய அரசு தன்னைப் புறக்கணிப்பதாக கருதுகிறார் அவர். இந்த நிலையில், தமிழக நலன்களுக்கு எதிரான விசயத்தில் மென்மையானப் போக்கினை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானித்ததன் விளைவுதான் மத்திய அரசை தீர்மான வடிவில் எதிர்க்கத் துவங்கியிருக்கிறார் எடப்பாடி. இதனை மோடி அரசு எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் கவர்னரை டெல்லி அழைத்தது.

 

eps



 
தன்னை சந்தித்த கவர்னரிடம், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ட்ராப்ட் உங்களுக்கு முன்கூட்டி காட்டப்பட்டதா? தீர்மானத்தின் வரிகளைப் படித்துப் பார்த்தீர்களா? என கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு கவர்னர், மேகதாது அணைக்கான ஒப்புதலை தந்த மத்திய அமைச்சகத்தின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்படவிருக்கிறது என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. கண்டனம் தெரிவிப்பதாக என்னிடம் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். 

 

இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி. அப்போது, கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமளவுக்கு நிலைமை தமிழகத்தில் இருப்பதையும் சமீபத்தில், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் விவரித்துள்ளார் கவர்னர்.  மேலும், வைகோ உள்ளிட்ட பலர் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவர்னர். 
 

rajnathwsigh



அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், ராஜ்நாத்தை சந்தித்து விவாதித்துவிட்டு சென்னைக்கு செல்லுங்கள் என கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்தை சந்தித்தார் கவர்னர். இந்த சந்திப்பில், தமிழக அமைச்சர்கள் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு சேகரித்து வைத்துள்ள தகவல்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சு.சாமி கொடுத்துள்ள புகார், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு , 7 பேர் விடுதலை என பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது ‘’ என விரிவாக சுட்டிக்காட்டுகின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 

 

’’எடப்பாடி அரசுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. இனி வரும் நாட்கள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும்‘’  என்கிறார்கள் தமிழக தலைமைச்செயலக அதிகாரிகள்.  இதற்கிடையே, கவர்னரின் டெல்லி பயணத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்ள டெல்லியிலுள்ள சோர்ஸ்களை அணுகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
 

 

 

 

 


 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.