Skip to main content

மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீர்..! மண்குடிசையில் ரவீந்திரநாத்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

dddd

 

தேனி மாவட்டம் போடி தொகுதிக்குள் வரும் குரங்கனி மலையில் சில வருடங்களுக்கு மலையேற்றப் பயிற்சியின் (டிரெக்கிங்) போது, திடீர் தீவிபத்தால் பலர் கருகி பலியாகினார்கள். அந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின், குரங்கனி மலைப் பகுயில் உள்ள அணைக்கரைப்பட்டி, முந்தல், சிறைகாடு, சோலையூர், மேலபரவு, முதுவாகுடி உள்ளிட்ட பல்வேறு மலைகிராம மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.

 

அதில் குறிப்பாக, முதுவாகுடிக்குச் செல்லும் 6 கி.மீ. தொலைவு ஜீப் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இருந்த குண்டும் குழியுமான சாலையை மூடியது வனத்துறை. இதனால் அங்கு வசிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ரொம்பவே அவதிப்பட்டார்கள். இதனால் கொதிப்படைந்த அந்த மக்கள் கடந்த எம்.பி.தேர்தலைப் புறக்கணித்தனர். தேனி சப்-கலெக்டர் வைத்தியநாதன் குரங்கனியிலிருந்து முதுவாகுடிக்கு 6 கி.மீ நடந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மக்களின் குமுறல்களைக் கலெக்டரிடம் அறிக்கையாக கொடுத்து இரண்டு வருடங்களாகப் போகிறது. ஆனால் அந்த மக்களின் நிலையோ முன்பைவிட மோசம் என்ற நிலைக்குப் போய்விட்டது.

 

அதுசரி, இந்த அவலமெல்லாம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பத்து வருடம் இருக்கும் நம்ம துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குத் தெரியாம இருக்குமா? தெரியும்... ஆனா தெரியாது… என்ற ரீதியில்தான் இருந்தார் பன்னீர்.

 

dddd

 

பிப்.08-ஆம் தேதி சசிகலா தமிழகத்திற்குள் வந்த பிறகு நம்ம பொழப்பு கந்தலாகிவிடும் என்ற பயபீதியில் தொகுதிவாசிகள் மீது திடீரென அக்கறை மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர் பன்னீரும் அவரது மகன்களான எம்.பி.ரவீந்திரநாத்தும் இன்னொரு மகனான பிரதீப்குமாரும்.

 

2011, 2016 தேர்தலின்போது ஓட்டுக் கேட்க முதுவாகுடிக்குச் சென்றதோடு சரி. அதன் பின் அப்படி ஒரு கிராமம் இருப்பதையே மறந்துவிட்டார் பன்னீர். சென்னையிலிருந்து கொண்டு மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து சசிகலாவுக்கு எதிராக மல்லுக்கட்டுவதைவிட, முதுவாகுடி மலையேறுவதே மேல் என்ற நினைப்புடன் கடந்த வாரம் தனது மகன் ரவீந்திரநாத், பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள், சில அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு முதுவாகுடி மலைகிராமத்திற்கு குரங்கனியிலிருந்து நடந்தே போனார். (வேற வழி, அங்கதான் ரோடே இல்லையே) பன்னீர் குழுவினரைப் பார்த்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள் அங்கு தைரியமாக வசிக்கும் பழங்குடியின மக்கள். "நம்புங்க, நான்தாங்க இந்த தொகுதி எம்.எல்.ஏ.'' என மாஸ்க்கிற்குள்ளே சிரித்தபடி முகம் காட்டினார் ஓ.பி.எஸ்.

 

dddd

 

"உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சுக் கொடுக்குறேன், புதுசா ரோடு போட ஏற்பாடு பண்றேன், குரங்கனியிலிருந்து டாப்ஸ்டேசன் வரைக்குமான ரோட்ல ஃபேவர்ப்ளாக் பதிக்கிறேன், அதுக்கு இப்பவே பூமி பூஜை போடுறேன்'' என சொல்லிவிட்டு பூமிபூஜையையும் போட்டார் பன்னீர்.

 

என்னதான் பண்ணினாலும் கையில நாலு காசு கொடுத்தா சரியாயிரும் என்ற கணக்குடன், "இந்தாங்க இடிஞ்சுபோன வீட்டைக் கட்டிக்கங்க'' என சிலருக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். 40 குடும்பங்களுக்கு 61 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

அதற்கடுத்ததாக ஓலைக்குடிசைகள், மண் குடிசைகளில் அப்பாவும் மகனும் உட்கார்ந்து மக்களிடம் பாசமழை பொழிந்தார்கள். மறுபடியும் ஓட்டுக் கேட்டு வருவோம் என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

 

இன்னொரு பக்கமோ,“பார்த்தீங்கல்ல, எங்க அண்ணனை, இந்த வயசுலயும் மலையேறி உங்களப் பார்க்க வந்துருக்காரு'' என பெருமை பீத்திக்கொண்டார்கள்.

 

ஓ.பி.எஸ்.சின் மலையேற்றம் குறித்து தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.லட்சுமணனிடம் பேசியபோது, “எதுக்காக இப்ப வந்துருக்காருன்னு அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும். 2008-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதல்வர் கலைஞரின் உத்தரவுப்படி ஆரம்ப பள்ளிக்கூடம், முதியவர்களுக்கு உதவித்தொகை என பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். அதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை, பன்னீரின் பாராமுகத்தையும் மறக்கவில்லை'' என்றார்.

 

தேனி யூனியன் சேர்மனும் வடக்கு ஒ.செ.வுமான சக்கரவர்த்தி நம்மிடம் பேசும்போது, “பணத்தால மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்குறாரு பன்னீர். ஆனா வரும் தேர்தலில் அது நடக்காது, அவருக்கு வெற்றி வசப்படாது. இப்போது மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீரும், ‘பி.டி.ஆர். கால்வாயில் மடைகட்டித் தருவேன், அதனால் 25 கிராமங்கள் பயனடையும்’னு சொன்னார். ஆனால் அதற்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கல. பன்னீரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தைப் பத்தியும் இந்தத் தொகுதி மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்'' என்றார். தேர்தல் நெருக்கத்தில் என்னென்ன வித்தைகளெல்லாம் காட்டப் போகிறார்களோ பன்னீர் & சன்ஸ்.

 

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

'மறப்போம் மன்னிப்போம்'- நான்கு பேரிடமும் நேரம் கேட்டு புகழேந்தி கடிதம்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'Let's forget and forgive'- pugazhendhi letter to the four people asking for time

அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என அண்மையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, 'எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களை விமர்சித்தவருடன் தேர்தல் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசத் தகுதியற்றவர். அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவின் சார்பில் வ.புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ;ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புகிறோம். ஆலோசனைகள் கருதிப் பகிர நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.