Skip to main content

மோடி, சீன அதிபர் சந்திப்பின் முழுப் பின்னணி...வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக்காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல் செல்லும் வழி, அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் வழியிலான ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் எல்லாம் பளபளக்க, பல்லவர் கால கலைநகரமான மாமல்லபுரம், நேற்றுதான் வடிவமைக்கப் பட்டதுபோல பாலீஷ் செய்யப்பட்டிருந்தது. ஆச்சரியமூட்டும் அலங்காரத்தை சென்னை வாசிகள் வாய்பிளந்து பார்த்தனர். சாக்கடை அடைத்துக்கொண்டால் கார்ப்பரேஷன் ஆட்கள் வர நாட்கணக்கில் ஆகும் மாநகரத்தில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தூண்களும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. 10 நொடியில் 100 கி.மீ பயணிக்கும் சீன அதிபரின் கார் வியாழனன்றே வந்திறங்க, ஆச்சரியம் கூடியது.

 

meeting



இந்த ஆச்சரியத்துக்கு நடுவே கெடுபிடிகளுக்கும் அடாவடிகளுக்கும் பஞ்சமில்லை. ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, சாஃப்ட்வேர் நிறுவனத்தினர் வீட்டிலிருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டனர். சென்னையில் படிக்கும் திபெத் மாணவ-மாணவியர் பாலின வேறுபாடின்றி போலீஸ் கஸ்டடியில் சிக்கித் தவித்தனர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமுமணிவண்ணன் வழக்கறிஞர்களோடு நேரில்சென்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தபிறகு, உத்தரவாதத்துடன் மாணவர்களை விடுவித்தது காவல்துறை. முதல்வரில் தொடங்கி தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் சீன அதிபர் வருகையில் மட்டுமே முழு கவனம் செலுத்தியது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருகைக்கும், இந்தியப் பிரதமருடனான சீன அதிபரின் சந்திப்புக்கும் என்ன காரணம், விவாதப் பொருள் என்ன, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி வெளியுறவுத்துறை மூச்சு விடவில்லை.


இது பற்றி விசாரித்தபோது, "இரு வருடங்களுக்கு (2017) முன்பு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. போர் பதட்டம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 2018-ல் சீனாவில் உள்ள ஹூபெய் நகரில் ஷி ஜின்பெங்கை சந்தித்து எல்லைக்கோடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. அதில் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்தியாவுக்கு வருமாறு ஜின்பெங்கை அழைத்தார் மோடி. அந்த அழைப்பின்படியே இந்தியா வந்துள்ளார் சீன அதிபர். சந்திப்புக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததும் சீன அதிபர்தான்'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இந்திய-சீன உறவு குறித்து பல வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவின் ஆதர்சபுருஷராக இருக்கிறார். கடந்த 1956-ல் சீனாவின் பிரதமராக இருந்த சூஎன்லாய் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்தவர், மாமல்லபுரத்திற்கும் விசிட் அடித்தார். மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்குமுள்ள தொடர்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டவர் சூஎன்லாய். அதன் பாதிப்பில் தற்போதைய சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருக்கலாம்'' என்கிறார்.

"சமீபகாலமாக தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வரும் பிரதமர் மோடி, அதன் ஒரு முகமாகவே ஜி ஜின்பெங்கின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்'' என்கிறார்கள் டெல்லி தரப்பினர். மேலும் விசாரித்தபோது, ""காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிராக இருந்தது. இந்தியாவுக்கு சீன அதிபர் செல்வது உறுதியானதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அவசரம் அவசரமாக சீனாவுக்கு பறந்தார். இரண்டு நாட்கள் ஜி ஜின்பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, ‘ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின் படியும், இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படியும் காஷ்மீர் விவகாரம் முறையாக தீர்க்கப்படவேண்டும். சூழலை கடினமாக்கும் ஒரு தரப்பு நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது’ என இந்தியாவுக்கு மெசேஜ் சொன்னது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அதிகார உரிமைகளை பாதுகாக்க சீனா ஆதரவு தெரிவிக்கும் என வெளிப்படையாகவே சொன்னார் ஜி ஜின்பெங். இதனை எதிர்த்து பதிலடி தந்தது இந்திய வெளியுறவுத்துறை. இப்படிப்பட்ட சூழலில்தான் சீனா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோடி'' என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்கோடு தகராறுகள், வர்த்தகத்திலுள்ள முரண்பாடுகள், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.