Skip to main content

கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

The message of the 13th century AD inscription ..!

 

 

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,  மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன், வி.சிவகுமார் ஆகியோர் தே.கல்லுப்பட்டி பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, அக்னீஸ்வரர் கோயில் பட்டர் கி.செல்லப்பா, ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில் அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர். 

 

இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது,

“தே.கல்லுப்பட்டியின் அடையாளமாகத் திகழ்வது தேவன்குறிச்சி மலை. இம்மலையின் வடகிழக்குப் பகுதியில் ஈஸ்வரப்பேரி என்ற கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு மடை அமைத்துள்ளனர். இதில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைப்பு உள்ளது. இதன் முதல் கண்ணில், தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் 7 வரிகள் கொண்ட கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. 

 

The message of the 13th century AD inscription ..!

 

நீர் வழிந்தோடும் இடத்தில் இருந்ததால் இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்தநிலையில் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ எனத்தொடங்கும் இக்கல்வெட்டு பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது. ‘கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றைப் பெரியகுளம்’ என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் இக்கண்மாய் மற்றும் மடை கலிங்கத்தரையரால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகக் கருதலாம். கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் கி.பி.12, 13 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநிலத் தலைவர்கள் ஆவர். கல்வெட்டில் சொல்லப்படும் கலிங்கத்தரையர் இப்பகுதியில் இருந்த குறுநிலத் தலைவராக இருக்கலாம். இக்கண்மாய் அமைத்த அவருடைய  சிறப்பை கல்வெட்டு விவரிக்கிறது. இதில் மன்னர் பெயர் அழிந்துள்ளது. கல்வெட்டில் கார் கொண்ட நிறத்தான், இன்னோசை, கடலிடத்தே போன்ற சொற்களும் வருகின்றன. 

 

இம்மடையின் மேற்கு பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளன. மடையை அமைத்து கொடுத்து, சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இச்சின்னங்கள் இடப்பட்டுள்ளன.

 

தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த துண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர்  செங்குடி நாட்டு பெருங்குன்றத்தூர் எனவும், இங்குள்ள குன்று பெருங்குன்றம் எனவும், இவ்வூர் கண்மாய் பெரியகுளம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘பெருங்குன்றைப் பெரியகுளம்’ என சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்தமைதியே இதிலும் காணப்படுகிறது. எனவே இக்கல்வெட்டு கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்” இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.