Skip to main content

இலவசமாக வேண்டாம்... மலிவு விலையிலாவது அனைவருக்கும் கிடைக்குமா?

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

sanitary napkins

 

படுக்கையிலிருந்து விழிக்கும்போது, படுக்கை இரத்தத்தால் நனைந்திருப்பது போல கற்பனை செய்துகொள்ளுங்கள். பாவாடையில் படிந்த இரத்தக் கறையுடன் பள்ளி கழிவறைக்கு ஓடிச் செல்வதுபோல கற்பனை செய்துகொள்ளுங்கள். கால்களுக்கு இடையே கிழிந்த கைப்பிடித் துணியை விட கேவலமான துணியை வைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கற்பனை செய்துபார்க்க சொன்னவற்றின் காட்சிகள் உங்கள் மன ஓட்டத்தில் ஓடினால், அருவருப்பாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு. இப்படித்தான் பல சிறுமிகள், பெண்கள் இந்தியாவில் மாதவிடாய்க் காலத்தில் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பல பெண்களின் பருவ வயதில் இது ஒரு பகுதியாகவே இருக்கிறது. 

 

குறிப்பாக மாதவிடாய் என்பதே புனிதமற்ற ஒன்று என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால், மாதவிடாய்க் காலத்தில் கஷ்டப்படும் பெண்களுக்கு அழுக்குத் துணியையே இன்றும் சில கிராமப் புறங்களில் கொடுக்கும் அவலம் நடைபெறுகிறது. அழுக்கை அழுக்குத் துணியால் சுத்தப்படுத்துவதுதானே உசிதம் என்கிற மனப்பான்மையில் செய்கின்றனர். ஆனால், அதனால் ஏற்படப் போகும் விளைவுக்கு, அவர்களால் எதுவும் செய்யமுடியாது. உலகம் முழுவதும் மாதவிடாய்க் காலத்தின் சுத்தம் குறித்து பலரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்தியாவிலும் தற்போது விழிப்புணர்வு செய்கின்றனர். ஆனால், மக்கள் மனதிலிருந்து 'புனிதமற்றது' என்கிற எண்ணத்தை மாற்ற சிரமப்படுகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு இந்தப் புற்று நோயால் 200 பெண்கள் மரணமடைவதாக ஒரு சர்வே சொல்கிறது.

 

இந்தியாவில் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இல்லாததால்தான் 70 சதவீத இனப்பெருக்க மண்டல நோய்கள் வருகிறது. ஆனால், இப்போதும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பிரச்சனையாகவே இருந்து வருகிறது. படித்தவர்கள் வீட்டிலும் கூட மாதவிடாய்ப் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. மேலும் வேறொரு ஆய்வின்படி, சானிட்டரி நாப்கின் பயன்படுத்தி மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இருப்பவர்கள் என்று பார்த்தால் 18 சதவீதப் பெண்கள்தானாம். மீதமுள்ளவர்கள் கிடைத்ததைப் பயன்படுத்தி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அதிலும் மிகச்சிலரே, மாதவிடாய்க் காலத்தில் சுகாதாரமாக இல்லை என்பதால்தான் இந்த நோய் நமக்கு வந்திருக்கிறது என்பதை உணர்கின்றனர். 

 

கடந்த பத்து ஆண்டுகளில் மாதவிடாய்ச் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுகளைப் பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். சானிட்டரி நாப்கின் மீது இருந்த வரியைக் குறைக்கச் செய்துள்ளனர். இது சம்மந்தமாகப் பல விளம்பரங்கள், ஆவணப்படங்கள் என்று வரிசையாகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வருட சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி, மத்திய அரசாங்கத்தின் 'சுவிதா' சானிட்டரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விற்பதாக அறிவித்தார். ஆனால், இந்த நாப்கினின் மொத்தச் செலவு ரூ. 2.50 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த வருடமும் சுதந்திர தின உரையின்போது, ‘பெண்களின் மாதவிடாய் என்பது இயற்கை. மனிதன் எப்படி உறங்குகிறானோ, சாப்பிடுகிறானோ அதுபோன்ற ஒரு பயலோஜிதான் பெண்களுக்கு வரும் மாதவிடாய்’ என்று 130 கோடி இந்தியர்களுக்கும் தெரிவித்தார். பெண்களின் மாதவிடாய்க் குறித்து சுதந்திர தினத்தில் பேசிய முதல் பிரதமர் என்று பலரும் ஆச்சர்யப்பட்டனர். 

 

cnc

 

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் மாதவிடாய்க்குப் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின், ஏழை எளிய கிராமப்புறப் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று மலிவு விலை சானிட்டரி நாப்கினை கண்டுபிடித்து, இந்தத் துறையில் ஒரு புரட்சி செய்திருக்கிறார், அருணாச்சலம் முருகானந்தம் என்னும் தமிழர். அதேபோல 2011ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 10 வயது முதல் 19 வரையிலான 41 லட்சம் கிராமப்புற பெண்களுக்கும், 7 லட்சம் தாய்மார்களுக்கும், 700 பெண் சிறைக் கைதிகளுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின் கிடைத்திட ஒரு திட்டத்தை அறிவித்தார். இந்தியாவிலேயே இதுதான் சானிட்டரி நாப்கின் இலவசமாகப் பெண்களுக்குக் கிடைத்திட அரசு சார்பாக உதவப்பட்ட முதல் திட்டம். ஒருசில இடங்களில் மலிவு விலை சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் கிடைக்கிறதா? பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்போது, மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இதுகுறித்து விரைவில் பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். முதலில் இந்தியா முழுவதும் சானிட்டரி நாப்கின் கிடைக்கச் செய்யவேண்டும், பணம் கொடுத்து வாங்க முடியாவதர்களுக்கு அரசே இலவசமாகத் தர வழி வகுக்க வேண்டும். 

 

ஸ்காட்லாண்ட் அரசு, பெண்களுக்கான மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை, அவர்களின் உரிமையாகக் கருதி நாடு முழுவதும் இலவசம் என்று சட்டம் இயற்றி இருக்கிறது. ஒரு காலத்தில் நம்முடைய இந்திய அரசாங்கம் மக்கள் தொகையைக் குறைக்க, அரசு மருத்துவமனைகளில் காண்டம்களை இலவசமாகத் தந்தது. சானிட்டரி நாப்கினும் தேவையான ஒன்றுதான் என்பதை உணர்ந்து பெண்களுக்கான உரிமையாக இதை அனைவரும் கருதிட வேண்டும். அரசு மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் இது அவர்களுக்கான உரிமை என்று பெண்களுக்காகக் குரலெழுப்ப வேண்டும்.

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.