Skip to main content

ஆறாத ரணமாக இருக்கும் கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 14 ம் ஆண்டு நினைவு நாள்

Published on 16/07/2018 | Edited on 16/07/2018

உலகையே மனதளவில் உறைய வைத்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14 -ம் ஆண்டு நினைவு நாள் இன்று.  குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

kumbakonam


 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில், ஸ்ரீகிருஷ்ணா என்கிற பெயரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி மதியம் சமையல் அறையின் மூலம் ஏற்பட்ட தீ பள்ளிமுழுவதும் பரவியதில் 94 குழந்தைகள் கதற, கதற கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

 

94 குழந்தைகள் இறந்த  14 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை  காலை 6 மணிக்கே  குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவரும் தங்கள்  வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும்  குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து,  பிடித்த தின்படங்களை வைத்து படையலிட்டனர், மனம் உறுகி அழுதனர்.

 

 

 

பிறகு குடும்பங்களோடு காவிரியின் வடபுறமாக இருக்கும் பெருமாண்டி இடுகாட்டில் உள்ள குழந்தைகளின் சமாதிகளில் இறந்த குழந்தைகளுக்கு பிடித்தமான  உணவு பழம், பலகாரங்களை வைத்து வழிபட்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பூர் அன்னம்மாள் கல்லறையில் உள்ள சமாதியில் வழிபட்டனர்.

 

பிறகு 9 மணிக்கு தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளிமுன் பெற்றோர்கள் கூடினர். அங்கு இரவே 94 குழந்தைகளின் உருவப்படங்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களுக்குமுன் இனிப்பு வகைகளை வைத்தும் அவர்களுக்கு பிடித்தமான துணிகளை வைத்தும், மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்திகளை ஏற்றி குழந்தைகளின் படங்களைப் பார்த்து கதறி அழுதனர்.

 

பின்னர் அந்தப் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் ஊர்வலமாக புறப்பட்டு காவிரியின் தென்கரையில் உருவாக்கபட்டுள்ள குழந்தைகள் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அகல் விளக்கு ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்சதீபம் ஏற்றி வைத்து கலங்கினர். இதற்கிடையில் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு, உறவினர்கள், தீ விபத்தின்போது படித்த மாணவர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

 

தீ விபத்து வழக்கும்  அது கடந்து வந்த பாதையும் :

கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதற்கு முழுக்க, முழுக்க காரணம் அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள்தான் என்றும் ஆசிரியர்கள் ஆடி வெள்ளி என்பதால் குழந்தைகளை வகுப்பறையில் வைத்து வெளியில் பூட்டி விட்டு கோயிலுக்கு சென்றனர் என்றும், அப்போது சமையல் கொட்டகையில் ஏற்பட்ட தீ 94 குழந்தைகளை கொன்று விட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

அது தொடர்பான வழக்கு முதலில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு  தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு  2014 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆர்.பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் துரைராஜ், அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 9 பேருக்கும் 2 முதல் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

 

 

பிறகு தண்டனையை எதிர்த்து பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் பள்ளித் தாளாளர் சரஸ்வதி, வழக்கு விசாரணையில் இருக்கும் போதே இறந்துவிட்டார். இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி ஆகியோர் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமலேயே தள்ளிவைத்தனர். 

 

பிறகு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த 286 பக்க தீர்ப்பில், 

"இந்த வழக்கில் முதல் குற்றவாளியான புலவர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை மாற்றி அமைக்கப்பட்டு, அவர் இதுவரை சிறையில் அனுபவித்த தண்டனைக் காலம் போதுமானது என்றும், சமையலர் வசந்திக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவரும் சிறையில் இருந்த தண்டனைக் காலம் போதுமானது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கீழமை நீதிமன்றம் விடுவித்த 11 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது." என 94 குழந்தைகளின் இறப்பிற்கு தீர்பளித்தது.

 

94 குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு, ‘குழந்தைகளை இழந்த வலியைவிட தீர்ப்பின் வலியே அவர்களை இன்றும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

 

kumbakonam


 

தங்களின் இரண்டு குழந்தைகளையும் தீயிக்கு பலி கொடுத்து விட்டு ஆதரவின்றி தவித்துவரும் இன்பராஜீம் அவரது மனைவியும் கூறுகையில் , "எங்களுக்கு குழந்தைகள் இறந்தபோதுகூட அவ்வளவு வலி தெரியல, எங்க குழந்தைங்க வயசுல இருந்த பிள்ளைங்க கல்லூரிக்கு போவதும் விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு போகிறத பார்க்கும்போது எங்க இரண்டு பிள்ளைங்க ஞாபகம் வரும். எங்களுக்கு இருந்த இரண்டு குழந்தைகளும் இறந்தபோதே நாங்களும் போய்சேர்ந்திருக்கனும், அத செய்யாம இப்ப ஆதரவு இல்லாம வயதான காலத்துல அனாதைகளா நிற்கிறோம்." என்று கலங்கிய படியே கூறினர்.

 

கும்பகோணம் சம்பவம் ஆறாத வடுவாக இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அரசாங்கமோ அதை மறக்கடிக்க துடிக்கிறது.