Skip to main content

பினராயி விஜயனின் மாஸ்டர் ஸ்டோக், காங்கிரஸின் சொதப்பல் கூட்டணி... கேரள உள்ளாட்சி தேர்தல் ஒரு பார்வை...

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

kerala com

 

 

அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின் தற்போது கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பக்கம் அனைவரின் கவனமும் சென்றுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால்தான் இந்த கவனம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு, தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்மாதிரி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு, சட்டமன்ற தேர்தலில் வெற்றி விகிதத்தை அதிகரிக்க இதைத் துறுப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

 

அந்த வகையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பின் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கடந்த வெற்றியைத் தக்க வேண்டும் அல்லது அதையும் தாண்டி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தனது வலுவை இழந்து வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது தேவையான ஒன்றாக இருந்தது. கேரள அரசியலுக்குள் நுழைய பாஜக, தனது ஆரம்பப் புள்ளியாக இதை மாற்ற களத்தில் இறங்கியது. இப்படி ஒவ்வொரு கூட்டணிக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகவே அமைந்துள்ளது.

 

கேரளாவில் கடந்த டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தன. நேற்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கான தேர்தலில்  கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி பெருவாரியாக முன்னிலை பெற்று வெற்றி விளிமில் உள்ளது. நகராட்சிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பந்தளம், பாலக்காடு நகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தடையாக பல சிக்கல்கள், சர்ச்சைகள் சவால்களாக முன்னிருந்தன. அவற்றில், பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியது பெரும் பிரச்சனையாகவே பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை அவர்களின் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அவர்களின் தாக்குதலைத் தடுக்காமல் பினராயி விஜயன் வேறு பாதையில் சென்று அவர்களைச் சமாளித்தார். இதுவரை தங்கள் அரசு மக்களுக்குச் செய்த நலத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குத் தெரியவைத்தார் பினராயி விஜயன். 2018ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு சமயத்தில் அவரது அரசாங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகள், சேவைகள் என்னென்ன, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான செயல்பாடு என பாசிட்டிவ் விஷயங்களை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் லிஸ்ட் போட்டுத் தெரிவித்தார்கள். இதுபோன்ற அவரது ஆட்சியின் செயல்பாடுகள், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பூதாகரமாக்காமல், மறைத்துவிட்டன. 

 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சியளவில் செல்வாக்கு இருப்பதைவிட கிராம பஞ்சாயத்திலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் செல்வாக்கு அதிகம் என்பது இத்தேர்தலின் மூலம் நிரூபனமாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானது, அதனால் அவரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைத்திருந்தது போன்ற விஷயங்களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலாக இருந்தது. ஆனால், கிராம மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும் அவர்களுக்கு மிகவும் அருகிலேயே கிடைக்கச் செய்தது மற்றும் நகராட்சி, மாநகராட்சியில் உள்ளவர்களை மட்டுமின்றி கிராம மக்களுக்கு நெருக்கடியான சமயத்திலும் அரசாங்க நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது போன்றவை இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் , ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளை மட்டும் அதிகமாகக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடுகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் பக்கமே இருப்பதின் வெளிப்பாடுதான் இது. சில இடங்களில் காங்கிரஸ் கூட்டணி மிக நெருங்கிய வாக்கு எண்ணிக்கைகளில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டில் யார் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக பகுதிகளை கைப்பற்றினார்களோ அவர்கள்தான் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றியைக் கண்டுள்ளனர். 

 

பல வருடங்களாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கேரள காங்கிரஸைப் பிரித்து தனது கூட்டணியில் பினராயி சேர்த்தது இத்தேர்தலில் பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. மத்திய கேரளத்தில் அவருடைய அலையால் காங்கிரஸின் பகுதிகளாகக் கருதப்பட்டவை எல்டிஎஃப் வசமானது. ஊராட்சித் தேர்தலில் மக்களுடைய பிரச்சனையைப் பேசி பிரச்சாரம் மேற்கொள்ளாமல், தங்கக் கடத்தல் குறித்து மட்டுமே காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது மக்களுக்கு ஒட்டவில்லை. ஜே.ஐ.டபுள்யூ கட்சியைக் காங்கிரஸ் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது, அவர்களின் கட்சியில் இருக்கும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையானது. கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் இதை விமர்சித்தது காங்கிரஸுக்கு மிகவும் பின்னடைவானது. ஜமாத் கட்சியை இணைத்தது சில இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் ஐ.ஜே.டபுள்யூ கட்சியை இணைத்ததற்கு அதிருப்தியை வெளிக்காட்டியது.

 

இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பாஜக கனிசமாக பிரிக்கத் தொடங்கியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து பந்தளம் நகராட்சியை வென்றிருக்கிறது பாஜக. இது எல்டிஎஃப் வசம் இருந்த தொகுதியாகும். பாலக்காட்டில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துள்ளது. பத்தனம்திட்டாவில் பல வார்டுகளையும் பாஜக வென்றிருக்கிறது. அதேபோல, திருவனந்தபுர மாநகராட்சியில் எதிர்கட்சியாகியுள்ளது பாஜக.

 

இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும் முன்னிலை முடிவுகளின்படி, தங்களுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருப்பதால் செங்கொடிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ‘இன்குலாம் ஜிந்தாபாத்’ என்னும் கோஷங்களுடன் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

 


 

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.