Skip to main content

"பாஜக மனிதப் புனிதர்கள் கொண்ட கட்சியா? ; வாரிசு அரசியலைப் பற்றி பாஜக பேசவே கூடாது..." - ராம. சுப்பிரமணியம் பேட்டி

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

ரதக

 

சென்னையில் அமித்ஷா வருகைக்கு பிறகான அரசியல் தட்பவெப்ப நிலை சூடு பிடித்துள்ளது. பாஜக கூட்டத்தில் பேசிய அவர் தமிழக அரசியலில் வாரிசு அரசியல் நிலவுவதாக திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் கட்சிகளை உடைக்கும் வேலையில் மறைமுகமாக ஈடுபட பாஜக தரப்புக்கு அவர் சிக்னல் காட்டியுள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

" கூட்டணி தொடர்பாக திமுக நன்றாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பாஜக கூட்டணியை உருவாக்குவதை விட அதை முறியடிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும். அதனால் திமுக தனது கூட்டணியை வலிமையாக்கும் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இந்தக் கூட்டணியில் கமல் உள்ளிட்டவர்களையும் இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். கமலை இணைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இருக்கப்போவதில்லை. அவருக்கு நகரப் பகுதிகளில் சில இடங்களில் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதையும் தாண்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் சில இடங்களில் நல்ல வாக்கு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஒரு சீட் கொடுக்கலாம். அதில் ஒன்றும் தப்பில்லை. திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்பதே நம்முடைய எண்ணம். 

 

ஏனென்றால் பாஜக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். வெற்றிபெற வேண்டும் என்பதைத் தாண்டி திமுக வெற்றிபெறக் கூடாது என்பதைக் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். திமுகவை வாரிசு அரசியல் என்று அமித்ஷா கூறினார் என்று கேட்கிறீர்கள். இதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. வாரிசு அரசியல் என்ற பதம் அவருக்குப் பொருந்துமா? 50 ஆண்டுக் காலமாக அரசியலில் இருப்பவர் ஸ்டாலின். அவரை வாரிசு அரசியல் என்று கூறினால் வாரிசு அரசியல் என்ற பதமே தவறாகப் போய்விடும். சாதாரண தொண்டனாக ஆரம்பித்து இந்த 50 வருடத்தில் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா?

 

ஸ்டாலினை விமர்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் விமர்சனம் செய்யுங்கள். உங்களுக்கு எப்படியாவது அரசியல் செய்ய வேண்டும். அதற்காக வாரிசு அரசியல் என்று கூறி அவரின் அரசியல் அனுபவத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள். அது உங்களுக்கே தீங்காகப் போய்விடும். அடுத்த தலைவர் இவர்தான் என்பதைக் கலைஞர் இனங்காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். படிப்படியாக உயர்ந்த அவரை இப்படிச் சொல்வதை அரசியல் அறிந்த யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதயநிதி கட்சிக்காக உழைக்கிறார். அவருக்குக் கட்சி அங்கீகாரம் கொடுக்கிறது. இதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது. பாஜக மனிதப் புனிதர்கள் கட்சியா? அடுத்தவர்களை இவர்கள் குறை கூறுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்கள் செய்யும் வாரிசு அரசியலைப் பேசினால் பெரிய லிஸ்ட் போட்டு அதை மட்டுமே நாம் பேச முடியும். ஆகையால் அவர்கள் பேசுவதைப் பேசட்டும். மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றார். 


 

Next Story

ஆளுநரின் துப்பறியும் கதை; அப்செட்டில் அமித்ஷா!

Next Story

பிரதமர் மோடியின் ‘5டி’ ; முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள் - ராம சுப்ரமணியன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ramasubramanian | Cmstalin | Cmstalin speech | Modi |

 

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பாட்காஸ்ட் மூலம் மக்களிடம் பல்வேறு அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசி வருகிறார். அதில், பாஜக ஆட்சி பற்றியும் பேசி தனது இரண்டாவது ஆடியோ பாட்காஸ்டை வெளியிட்டார். இது குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

இந்தியா முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து பேசுபொருளாகியுள்ளது என்பது உண்மை. மேலும், ஆடியோவில் சொல்லப்படும் விசயங்கள் இந்திய மக்களிடையே சேர்கிறது என்ற கவலை பாஜகவிடம் உருவாகியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வை குறிவைக்க முயல்கின்றனர். ஸ்டாலின் பேசிய ஆடியோ ‘நீங்கள் சொன்ன மகளிர் உரிமைத் தொகை வந்துவிட்டது... ஆனால், மோடி அவர்கள் தெரிவித்த 15 லட்சம் வரவில்லை’ என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அடுத்து, குஜராத்தை வளமாக மாற்றுவேன் என்று கூறிய பொய் பிம்பங்களை பற்றியும் முதல்வர் பேசியுள்ளார். 

 

இதற்குப் பல ஆண்டுகள் முன்பு மோடி அறிவித்த, 5டி- வளர்ச்சியாக திறமை, பாரம்பரியம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்வர் சொல்கிறார், ‘5டி-க்கு பதில் 5சி, வகுப்புவாதம், ஊழல், கார்ப்பரேட் முதலாளித்துவம், ஏமாற்றுதல் மற்றும் குணநலன் படுகொலை தான் இருக்கிறது’ என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணியைக் கண்டு சிலர் அஞ்சியுள்ளனர். தொடர்ந்து, சிஏஜி அறிக்கையின் 7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசினால் பயம் வந்துவிடும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

இதன் தொடர்ச்சியாக, அயோத்தி திட்டத்தில் கோவில் கட்ட இடம் வாங்கியதில் குளறுபடி, நடுத்தர வர்க்கத்தினரை விமானத்தில் அழைத்து செல்லும் ‘உடான்’ திட்டத்தின்படி தமிழகத்தில் சேலத்தை தவிர பிற அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. சினிமாவில் வரும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போலத்தான் ரயில்வேயிலும் செலவுகள் கூடியுள்ளது. தொடர்ந்து, ஓய்வூதிய திட்ட நிதிகளை எடுத்து விளம்பரங்களுக்கு செலவிட்டது. சுங்கவரியை சிலரிடம் வசூலிக்காமல் விட்டது. அதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் கடிதம் அனுப்பியது முதல் பாரத்மாலா திட்டத்திலும் நிறைய சிக்கல் உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார். பின்பு, துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் 1270% நிதி உயர்ந்தது என்றும் கூறியுள்ளார். 

 

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலும், இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது, ஒரே தொலைப்பேசியை வைத்து பல சிகிச்சைகளை பெற்றது. ஒரே ஆதார் எண்ணில் பல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை தகவலையும் ஸ்டாலின் எடுத்து சொல்லி ‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இ.ந்.தி.யா. கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். மேலும், ஊழலின் உறைவிடமாக பாஜக இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலும், பத்திரிகைளிலும் கூட பேசுவதில்லை என ஆதங்கத்துடன் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, முதல்வரின் இந்த பேச்சு இந்திய மக்களை சென்றடையும் என்பதே எனது கருத்து.

 

இந்த சுங்கவரி உயர்வு குறித்து, நக்கீரன் களத்திற்குச் சென்று நிலவரத்தை தெரிந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்தது. இதேசமயம், சிஏஜி அறிக்கை குறித்து  பாஜக, ‘இந்த அறிக்கை எல்லா காலத்திலும் வரக்கூடியது தான். திட்டங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு தான் செயல்படுத்தும்’ எனக் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. போன்றவர்கள் ‘இந்த முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்துள்ளது’ எனத் தக்க பதிலையும் அளித்தனர். எனவே, எந்த குற்றச்சாட்டையும் பாஜக மீது வைக்க முடியாது என்றதும் பின்னர் வந்த சிஏஜி அறிக்கையும், மு.க. ஸ்டாலின் கூறிய கருத்தும் பாஜகவினரை அச்சமடைய வைத்துள்ளது என்பது உண்மை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...