Skip to main content

"கவுன்சிலர் பதவிக்குக் கூட தகுதியில்லாதவர் எடப்பாடி; ஊழல் மட்டுமே செய்தவருக்கு எங்கள் ஆட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை..." - புகழேந்தி பேச்சு

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

ு

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுக மூத்த தலைவர் புகழேந்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

 

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும்; முதல்வர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு திமுக அரசே மிகச் சிறந்த உதாரணம் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் எதிர்க் கருத்து தெரிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு ஆட்சி எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த பதினெட்டு மாத திமுக ஆட்சி என்று கூறியுள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு உங்களின் பதில் என்ன?

 

இன்றைக்குத் தமிழக முதல்வரின் ஆட்சி இந்தியாவில் எங்குமே நடைபெறாத வண்ணம் மிகச் சிறப்பான ஒரு ஆட்சியைத் தமிழகத்தில் அவர் கொடுத்து வருகிறார். இதை இந்தியாவில் உள்ள அனைவரும் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கூட ஏற்றுக்கொள்வார்கள். எடப்பாடிக்கு ஒரு கவுன்சிலராக இருக்கக்கூடத் தகுதியில்லாதவர். இன்னும் அவர் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட அவருக்கு எந்த தகுதியும் வந்ததாக நான் நினைக்கவில்லை. யாரோ ஒருவருடைய காலில் விழுந்து பதவியைப் பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்குத் தமிழகத்திலே பெரிய அரசியல் தலைவரைப் போல் பேசி வருகிறார்.

 

ஆட்சியின் மீது தேவையில்லாத உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆட்சி எப்படி நடத்துவது என்று இவர் திமுகவுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கையை காலை பிடித்து இவர் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்ததை போல் இதுவரை தமிழகம் வேறு யாரையும் கண்டதில்லை. அவங்க தலைவி வழியில் எடப்பாடியும் சிறப்பாகக் கொள்ளையடித்து வந்தார். அவர் ஏற்கனவே சொன்னதுதானே, எங்கள் தலைவி வழியில் ஆட்சி நடத்துவோம் என்று பதவியேற்றதும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனால் அவர் ஆட்சியில் இருக்கும்போது அதை நிறைவேற்றி வருகிறார். 

 

ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர் இந்தியாவிலேயே இவருடைய தலைவி ஜெயலலிதா தான். அவர் வழியில் ஆட்சி நடத்தியதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியைப் பற்றி குற்றம் சுமத்த என்ன இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியைக் கடந்த நான்கு வருடமாகத் தொடர்ந்து கொடுத்து வந்த அவர், திமுகவைப் பற்றிப் பேசுவதற்கு உரியத் தார்மீக தகுதியையே இழந்துவிட்டார். எங்கள் தலைவர் இவரைப் போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆனவர் இல்லை. மக்களைச் சந்தித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர். எனவே எடப்பாடி இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு நினைத்துப் பார்த்தால் எங்களைப் பற்றிப் பேசவே கூச்சப்படுவார்" என்றார்.

 

 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்