Skip to main content

பேசாம போயிடுங்க... குறுக்க வராதீங்க... எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மிரட்டல்

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம், கட்டி முடித்து திறப்பதற்குள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என கண்டனம் தெரிவிக்கிறார்கள் பொதுமக்களும், சமுக ஆர்வளர்களும்.
 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள தர்மதானபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் ஆத்துக்குடி. மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையையொட்டி உள்ள அந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அண்மையில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று நிறைவடைந்திருக்கிறது.

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நிதியிலிருந்து 12 லட்சமும், ஊரக வளர்ச்சிதுறை மூலம் 10 லட்சமும் ஒதுக்கப்பட்டு 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டதாக அங்குள்ள அறிவிப்பு பலகையே சாட்சியாக உள்ளது.

இந்த நிலையில் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள கட்டிடம் நேற்று முன்தினம் பெய்த லேசான மழையில் கான்கிரீட் பில்லர்கள் உடைந்து விழத்துவங்கியுள்ளது. வராண்டா பகுதிகள் முழுவதும் உள்வாங்கிக் கொண்டது. இதை கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
 

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறுகையில், "2016 - 17 ல் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் துவங்கி சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. பணிகள் நடந்து வந்தபோதே தரமின்றி பணிகள் நடந்ததை கண்டித்து கேள்வி எழுப்பினோம்.

இது எம்.எல்.ஏ செய்கிற வேலை, இதையே குறை கண்டுப்பிடிக்கிறீங்களா ஜெயிலுக்கு போக வேண்டிவரும் என மிரட்டினர். அதையும் மீறி கூட்டமாக சென்று முறையிட்டோம எந்த பதிலும் இல்லை.

தற்போது அண்மையில் பெய்த லேசான மழையில் கட்டிடத்தை தாங்கி நிற்கக்கூடிய பில்லர்கள் மழையில் கரைவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அதன் பிறகு கட்டிடம் முழுவதையும் ஆய்வு செய்தபோது முற்றிலும் தரமின்றி சவுடு மண்ணை மட்டும் வைத்து ஜல்லி, கம்பி இல்லாமல் கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

தரைத்தளம் உள்வாங்கியுள்ளது. கை கழுவும் தொட்டி கை பட்டாலே உடைகிறது. வெறும் கைகளாலேயே இடித்து தள்ளிவிடும் நிலையில் இருக்கிறது. வலுவில்லாமல் 22 லட்சத்தை முழுங்கி விட்டனர். தரமின்றி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்கிற நிலையில் பள்ளிக்கட்டிடத்தை கட்டியுள்ளனர்.

பில்லர்களில் கம்பிகளை சுற்றி ரிங் வளையம் இல்லாமல், சிமெண்ட் கலவையில் கப்பி ஜல்லி இன்றி கட்டியுள்ளனர். கும்பகோணம் பள்ளியில் நடந்த சோகம் போல இன்னொரு முறை நடந்து விடக்கூடாது. முறையான ஆய்வு செய்து தரமாக இருக்கிறது என்பதை உறுதி செய்த பிறகே கட்டிடத்தை திறக்கனும்." என்றார். 
 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்ட செயலாளர் அறிவழகனோ, "ஏற்கனவே இப்பள்ளி உரிய பராமரிப்பின்றியும், சுற்றுச் சுவர் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து தேங்கி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழலில், கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் தரம் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தில் அருகில் செல்லக்கூட அச்சப்பட வேண்டியுள்ளது.

மயிலாடுதுறை எம்.எல்.ஏ நிதியில், அனைத்து பணிகளையும் அவரே குளத்து சவிடு மண்னை கொண்டு கட்டி வருகிறார். அவர் தற்சமயம் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆத்துக்குடி பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு மீண்டும் கட்ட வேண்டும். ஊழலுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அணைவரையும் கைதுசெய்ய வேண்டும். இல்லையென்றால் பள்ளியை திறக்க விடாமல் வாலிபர் சங்கம் சார்பில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்." நடத்த உள்ளோம் என்றார்.
 

"எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் யார் தலை, யார் வால், யார் முண்டம்னு தெரியாத குலையாக தானே இருக்கிறது. புதிய எம்.எல்.ஏ. க்கள் கூட அமைச்சர் மாதிரி மிரட்டுறாங்க, இந்த ஆட்சி எப்போது தொலையுமோ," என வேதனையாக கூறுகிறார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர்.

 

 

Next Story

மாநகராட்சி கூட்டத் தொடர்; தி.மு.க.கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
DMK in the Erode Municipal Corporation meeting. Argument between councilors

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில்  நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு முன்னாள் எம்.பி.கணேசேமூர்த்தி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரு நாய்கள் தொந்தரவு குறித்து தடுப்பு நடவடிக்கைகள்,ஊராட்சி கோட்டை குடிநீர் முறையாக சில பகுதிகளுக்கு செல்லாதது, வார்டு பகுதியில் சாலை வசதிகள், சீரமைக்காத பாதாள சாக்கடை காரணமாக சாலை விபத்து மற்றும் ஆழ்துளை கிணற்றில் சாய கழிவு கலந்து சுகாதார சீர்கேடு போன்ற பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறித்து மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தவறியதால் 65 -க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்காததைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் வெளிநடப்பு செய்தனர். 

அப்போது தமிழக அரசு மீது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகாருக்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பை சுட்டிகாட்டி பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் கோகிலாவாணி பேசும்போது, எனது வார்டுக்கு போதிய தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பேசினார். ஏராளமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனது வார்டில் அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களாகவே வந்து பணிகளைத் தொடர்கின்றனர். இது குறித்து எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று பேசினார். இது குறித்து அவர் மேயரிடம் பேசும் போது மற்ற திமுக கவுன்சிலர்கள் அதற்கு பதில் அளிக்கவும் முயன்றனர். அப்போது திமுக கவுன்சிலர் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Next Story

‘பட்டும் படாமல்... தொட்டும் தொடாமல்’ - விஜய்யின் சேஃப் ஷோன் அரசியல்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
tamilaga vettri kazhagam leader Vijay Safe zone Politics

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளைச் செய்துவந்தார். அரசியல் ஆசை காரணமாகத் தனது மக்கள் இயக்கத்தைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். கடந்த பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்த விஜய், நமது இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, 2026 சட்டமன்றத் தேர்தல்தான் என்று அறிக்கை வெளியிட்டார். 

கட்சி தொடங்கியதிலிருந்து தற்போது வரை மக்களையோ, ஊடகத்தையோ சந்திக்காமல் இருக்கும் விஜய் சமூக வலைத்தள அறிக்கையின் மூலமாகவே கட்சியை நடத்திவருகிறார். வலைத்தளம் மூலம் வாழ்த்துக்கள் மட்டுமே தெரிவித்துவந்த விஜய் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழக அரசைக் கண்டித்துப் பதிவிட்டிருந்தார். அதேசமயம் மணிப்பூர் கலவரம், நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல சம்பவங்களுக்கு விஜய் ஏன் குரல்கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விஜய் தெரிவிக்காததால், எந்த மாதிரியான அரசியலை முன்னிறுத்தி பயணிக்கப்போகிறார் என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இதுஒரு புறம் இருக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோ, விஜய்யின் அரசியலைத் தொடர்ந்து வரவேற்று வருகிறார். எந்தக் காலத்திலும் யாருடனும் கூட்டணி கிடையாது என்று கறார் கட்டிய சீமான் சமீபகாலமாக வேறு மாதிரியாகத் தெரிகிறார். செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் விஜய்யின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு, செல்வேன் எனப் பதிலளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், நாம் தமிழருக்கும் கூட்டணி அமையுமா? என்று கேட்டதற்கு, “விஜய் ஸ்டெய்லில் சொல்லவேண்டும் என்றால் ‘ஐ வெய்டிங்’(I am waiting) என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி உறுதி என்றே நாம் தமிழர் கட்சியினர் நம்புகின்றனர்.

tamilaga vettri kazhagam leader Vijay Safe zone Politics

கடந்த ஆண்டு மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கூறிய நடிகர் விஜய், “நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான் எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பட்டியலில் அண்ணாவை விஜய் குறிப்பிடாததால் திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் களம்காண்பார் என்று பேசப்பட்டது.  ஆனால் அதே சமயம் திராவிட கட்சிகளின் கொள்கைகளான தமிழ்நாட்டின் மாநில உரிமை, பிளவுவாத அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட வார்த்தைகளின் விஜய்யின் முதல் அறிக்கையில் இருந்தது. இப்படியாக எந்த ஒரு தெளிவும் இல்லாமல்தான் இருக்கிறது விஜய்யின் தற்போதைய அரசியல்.

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்றது. கட்சி ஆரம்பித்து, இது முதல் விழா என்பதால், கூடுதல் கவனமும் இவ்விழா மீது இருந்தது. விழாவில் பேசிய விஜய், “தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், நமக்கு என்ன அதிகம் தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள் தேவை. தலைவர்கள் என்று அரசியல் ரீதியாக மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. இப்போதைக்கு நல்லா படிங்க. மத்தத அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அரசியலும் கரியராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா?. 

ad

நல்லதைக் கெட்டது மாறியும், கெட்டதை நல்லது மாறியும் சோஷியல் மீடியாவில் புரணி பேசுகிறார்கள். அதையெல்லாம் பாருங்கள். ஆனால், எது உண்மை என்று அறிந்து செயல்படுங்கள். அப்பொழுதுதான் இந்த நாட்டில் உண்மையான பிரச்சனை என்ன, மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூகத்தில் நடக்கிற தீமை, நன்மை பற்றியெல்லாம் தெரியவரும். அப்பொழுதுதான் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரத்தையெல்லாம் நம்பாமல் இருக்கலாம். எது நல்லது, எது கெட்டது என அறிந்துவிட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு விசாலமான உலக பார்வையை உங்களால் வளர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் ஆகியிருக்கிறது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் எனக்கு இது அச்சமாக இருக்கிறது. இதில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், ஆளும் அரசு இதையெல்லாம் தவற விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேச வரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை. சொல்ல போனால், அரசாங்கத்தை விட நம்ம வாழ்க்கையை நம்மதான் பார்க்க வேண்டும். ‘உங்களுடைய மனக்கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். Say to temporary pleasures, say no to drugs’” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் சமீபகாலமாகப் போதை கலாச்சாரம் அதிகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டப்படுகிறது. திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர். இந்த சமயத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்துப் பேசிய விஜய், “இளைஞர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்றும், ஆளும் அரசு இதையெல்லாம் தவற விட்டுவிட்டார்கள் என்றும் சொல்லலாம். அதைப்பற்றியெல்லாம் இங்குப் பேச வரவில்லை” என்று திமுக அரசை விமர்சனம் செய்வதுபோல் வந்து சட்டென வேறுபக்கம் பேச்சை மாற்றினார்.

tamilaga vettri kazhagam leader Vijay Safe zone Politics

அதேசமயம், தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆனால், நமக்கு என்ன அதிகம் தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள்” என 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியைப் புகழ்ந்து பேசுவதுபோல் போகிற போக்கில் இதுவரை தமிழகத்திற்கு நல்ல தலைவர்களே கிடைக்கவில்லை என்ற ரீதியில் விஜய் பேசினார்.

இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பித்து களத்திற்குள் வந்தபிறகும் கூட ஒரு தீர்க்கமான குற்றச்சாட்டை விஜய்யினால் வைக்க முடியவில்லை. பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தற்போது வரை சேஃப் ஷோன் அரசியல்தான் செய்துவருகிறார். எப்போதுதான் விஜய் தனது எதிர்க்கட்சி யார் என்று முடிவு எடுப்பார் எனத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலவே நாமும் காத்திருக்கிறோம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.