Skip to main content

"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
vairamuthu with spb

 

 

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யோடு, கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் பயணித்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி.தான். அதேபோல் வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வுப் பாடலைத்தான், எஸ்.பி.பி., கடைசி கடைசியாய் தானே இசையமைத்துப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். எஸ்.பி.பி.க்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த வைரமுத்து நம்மிடம் எஸ்.பி.பி.,  குறித்து பகிர்ந்த நினைவலைகள்...

 

"என் பதினான்கு வயதிலேயே எஸ்.பி.பி.யின் பாடலை அவர் ரசிகனாக நான் கேட்டேன். அடுத்த பதின்மூன்று வருடத்தில் என் பாடலைப் பாடுமிடத்தில் அவரைச் சந்தித்துவிட்டேன். அப்படியொரு திகைப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டி.எம்.சௌந்தரராஜனைக் கழித்துவிட்டு எந்த ஆண்குரலையும் ரசிக்க முடியாதவனாக இருந்தவன் நான். டி.எம்.எஸ், பி.சுசீலாவுக்கு நிகராக வேறெந்தக் குரல்களையும் வைத்துப் பார்க்கமுடியாத மன நிலையில் நானும் தமிழ்ச் சமூகமும் இருந்த காலகட்டம் அது. அப்போது எங்கள் முன்முடிவுகளைத் தாண்டி அன்பொழுகும் குரலாக எஸ்.பி.பி.யின் குரல் என்னை ஈர்க்கத் தொடங்கியது. 'சாந்தி நிலையம்' படத்தில் இடம்பெற்ற 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலைக் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த இனிமை, புதுமை, இளமை என்ற மூன்றும் பரவசத்தால் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்தன. அதே சமயத்தில் 'சபதம்' படத்தில் இடம்பெற்ற "தொடுவதென்ன தென்றலோ... மலர்களோ...' என்ற பாடலும், 'ஏன்' படத்தில் இடம்பெற்ற "இறைவன் என்றொரு கவிஞன்; அவன் படைத்த கவிதை மனிதன்' என்ற பாடலும் எஸ்.பி.பி.யை என் மனதின் நெருக்கத்துக்குக் கொண்டுவந்தன. முன் உதாரணம் இல்லாத குரலாக அவர் குரல் இருந்தது. காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரல் அது. காதலுக்காக ஒரு பாடகன் வழக்காடுவதை அவர் குரலில்தான் பார்த்தேன். அப்படித்தான் எஸ்.பி.யிடம் நான் வயமிழந்தேன்.

 

1971 ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக் கொண்டிருந்த நேரம். எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் அத்தை, “எங்கள் கல்லூரியில் எஸ்.பி.பி.யின் கச்சேரி நடக்குது; வர்ரியா?" என்றார். என் கனவுப் பாடகனைப் பார்க்க வரமாட்டேன் என்றா சொல்வேன். அப்போது அவர் பாடிய 'பொட்டு வைத்த முகமோ' பாடல், பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அதனால் கூட்டமான கூட்டம். அந்த மேடையில்தான் அவர் உருவத்தை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.

 

எஸ்.பி.பிக்கும் எனக்குமான தொழில் உறவில் காலம் ஒரு கனத்த ஒற்றுமையை விட்டுச் சென்றி ருக்கிறது. கொரோனா குறித்து இருபாடல்கள் கேட்டார். எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். இரண்டுக்கும் அவரே இசையமைத்துப் பாடினார்; யூ டியூபில் பதிவேற்றினார்; பரவலான பாராட் டைப் பெற்றார். அதுதான் அவரது கடைசிப் பாடல். என் முதல் பாடலைப் பாடியவர் அவர்; அவரது கடைசிப் பாடலை எழுதியவன் நான்.

 

எஸ்.பி.பி.யின் மரணம், கலையுலகத்திற்கு மட்டுமல்ல சிறு கிராமம் வரை சோகத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. ஒவ்வொரு வீட்டி லும் பெரும் வேதனையும் வலியும் நுழைந்திருக்கிறது. இது பாட்டு மரணம் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டு மரணமும் கூட. அதனால் தான் இந்த சகாப்தத்தின் கடைசிப் பெரும் பாடகர் எஸ்.பி.பி. மறைந்துவிட்டார் என்றேன். பாடுதல், இசையமைத்தல், நடிப்பு, பின் னணி பேசுதல், பலமொழி அறிவு, பண்பாடு, கனிவு என இவ்வளவு கலவையோடு ஒரு கலைஞன் பிறப்பது அரிதிலும் அரிது."  

 

 

Next Story

“பாரதிதாசனை தி.மு.க குறியீடாக சுருக்கிவிட்டனர்” - வைரமுத்து  

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vairamuthu about bharathidasan

பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசனின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதனிடையே பாரதிதாசன் குறித்த நினைவுகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின், தமிழக சார்பில் மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்” என அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர். காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன். இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள். பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.