Skip to main content

திமுகவை விலக்கிய விஜயகாந்த் வீராப்பு! -பின்னணியை விவரிக்கும் தேமுதிக தரப்பு! 

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

ஒரு வழியாக தமிழகத் தேர்தல் களத்தில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துவிட்டது. இந்த முறையும் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கதவைச் சாத்திவிட்டது தேமுதிக.  
 

vijayakanth



எப்படியாவது, கூட்டணிக்குள் தேமுதிகவை இழுத்துப்போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்தார் ஸ்டாலின். கனிமொழி, திருநாவுக்கரசர் ஆகியோரைத் தூது அனுப்பியும் மசியவில்லை விஜயகாந்த் தரப்பு. தாமே களத்தில் இறங்குவோம் என்று ஸ்டாலினே போனார். 
 

தேமுதிக தரப்பு கேட்ட சீட் எண்ணிக்கை, விட்டமின் 'ப’ போன்ற விவகாரங்கள் திமுகவை யோசிக்க வைத்தது. எப்படியும் வருவார் என்று காத்திருந்தும் பலன் இல்லாததால், மற்ற கட்சிகளுக்குத் தொகுதியை ஒதுக்கிவிட்டு,  பிரச்சாரத்தை துவங்கி விட்டார் ஸ்டாலின். இன்று (06-02-2019) விருதுநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். 
 

“திமுகவிற்கு பிடி கொடுக்காததற்குக் காரணம் சீட் மட்டுமல்ல.  பழைய பகையை மனதில் வைத்துத்தான்..” என்கிறார்கள் தேமுதிக வட்டாரத்தில்.  2014 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தபோது,  அதனைச் சீர்குலைக்கும் விதமாக  “தே.மு.தி.க.வுடன் கூட்டணி தேவையில்லை” என்று மு.க.அழகிரி கூறியது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாகத்தான், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார் அழகிரி.
 

தே.மு.தி.க.வுடனான கூட்டணிக்காகத்தான் மகன் என்றும் பாராமல்,  அழகிரியைக் கட்சியிலிருந்தே நீக்கி, விஜயகாந்தின் அனுதாப பார்வையை கருணாநிதி எதிர்நோக்குகிறார் என அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அந்த அளவுக்கு தி.மு.க. வளைந்து கொடுத்தபோதிலும், "இதெல்லாம் நாடகம்... இந்த நாடகத்திற்கு தே.மு.தி.க அடிபணியாது.." என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.  சொன்னது போலவே அந்தத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக.

 

vijayakanth


அதேபோல், 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும்,  ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் கருணாநிதி. ஆனால், அதற்கு விஜயகாந்த் உடன்படாத காரணத்தால்,  கட்சியை உடைக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது, விஜயகாந்துடன் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோரைத் தூண்டிவிட, ‘மக்கள் தேமுதிக’ உருவானது. அந்தக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது திமுக. பின்னர், அந்தத் தேர்தலுடன் மக்கள் தேமுதிக காணாமல் போனது தனிக்கதை.
 

"இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், கடைசிவரை திமுகவிற்கு பிடி கொடுக்காமல் கெத்து காட்டிவிட்டார் எங்கள் கேப்டன்.." என்கிறார்கள் தேமுதிகவினர்.
 

கடந்த தேர்தலைப் போல இந்த முறையும் தங்கள் பக்கம்தான் தேமுதிக வரும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு அழுத்தமாக இருக்கிறது.  விஜயகாந்த் என்ற பழம் நமக்குத்தான் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினரும் உள்ளனர்.   “எல்லாம் பேசி முடித்தாகிவிட்டது. அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.” என்கிறார் அமைச்சர் ஒருவர். ஆம். தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்பது இன்று தெரிந்துவிடும். 
 

 

 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்