Skip to main content

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா?

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

 

"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். 
 

நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியாக இருக்கிறது. அதேபோல, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால், அத்தொகுதியும் காலியாக உள்ளது. நாங்குநேரிக்கு நவம்பருக்குள்ளும், விக்கிரவாண்டிக்கு டிசம்பருக் குள்ளும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 
 

இரு தொகுதிகளுக்கும் நவம்பரில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதால், இரு தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிட அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வின் திட்டத்தை அறிந்து, "நாங்குநேரியை விட்டுவிடக்கூடாது' என இப்போதிலிருந்தே காய்களை நகர்த்தியபடி இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.  
 

ksa


 

இந்த நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்குநேரி தொகுதியில் நடந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக் குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்கள், ""கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், "இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. அதனால் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி தொகுதி யைக் கேட்டுப் பெறுங்கள்' என வலியுறுத்தினர். 



கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ""உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மேலிடத்தில் தெரிவிக்கப்படும். பொதுவாக காங்கிரசின் ஆணிவேர் தென் மாவட்டங்களில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி யும் அதுதான். அதனை நாம் வலிமைப்படுத்த வேண்டும். 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையிலேயே இருந்து வருவதற்கு காரணம் என்ன?  எப்போதாவது யோசித்திருக்கிறோமா? பிற மாவட்டங்களில் எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் நாம் தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? முடியாதா? கூட்டணி வலிமையில்லாமல் ஜெயிப்பது கஷ்டமா?'' என கேள்வி எழுப்பியவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

 

ஆனால், "தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாதா?' என அவர் கேட்ட கேள்வி, நாங்குநேரியில் கூட்டணி இல்லையாங்கிற சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது. நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. தவிர்த்தால் கூட்டணி உடைகிறதோ இல்லையோ தி.மு.க.வை ஜெயிக்க வைக்கும் கடமையிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் விலகிக்கொள் வார்கள். அது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்'' என விவரித்தனர். 

 

கே.எஸ்.அழகிரியின் அந்த பேச்சு வெளியே கசிந்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்... "நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதோடு இணைந்து வெற்றிபெற செய்ய வேண்டும்' என தீர் மானம் நிறைவேற்றப்பட்டதாக பரவிய செய்தி கூட்டணிச் சிக்கலை விரிவுப்படுத்தி யிருக்கிறது. மேலும்,  நாங்குநேரியில் காங் கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.   

 

இந்த நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ""நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, ""நாங்குநேரியில் தி.மு.க. போட்டியிடும்'' என தெரிவித்தார். கூட்டத்தில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை மறுக்கவில்லை. இதனால், அப்போதே எங்களுக்கு பதட்டம் வந்துவிட்டது. "நாங்கு நேரியை மறந்துவிடுங்கள்' என்கிற தகவலே தி.மு.க. தரப்பி லிருந்து எங்களுக்கு கிடைத்தபடி இருக்கிறது. அதனால், காங்கிரசுக்குத்தான் நாங்குநேரி என்பதை தி.மு.க. தலைமையிடம் பேசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என சோனியாகாந்தியிடமும் ராகுல்காந்தி யிடமும் நாங்கள் வலியுறுத்தியுள் ளோம். காங்கிரசுக்கு தொகுதி கிடைக் காமல் போனால் கூட்டணி உறவு முறியலாம்'' என்கிறார் அழுத்தமாக. 
 

கூட்டணிச் சிக்கலுக்கு வித்திட்டி ருக்கும் நாங்குநேரி ஆலோசனைக் கூட்டம் குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமா ரிடம் நாம் பேசியபோது, "" கூட்டத்தில் பேசிய அழகிரி, "இந்த கூட்டத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் மீண்டும் போட்டி யிட வேண்டும் என விருப்புகிறீர்கள். கூட்டணியில் நாம் இருப்பதால் அது பற்றி முடிவெடுக்க முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். யார் போட்டி யிட்டாலும் அவர்களை வெற்றிபெற வைப்பது நமது கடமை' என்று பேசினாரே தவிர, கூட் டணிக்கு எதிராகப் பேசவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்து அதனை எழுதி வைத்திருந்தோம். கூட்டம் துவங்குவதற்கு முன்பு இதுகுறித்து கே.எஸ்.அழகிரி எங்களிடம் விவாதித்தபோது, "காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த தீர்மானம் வேண்டாம்' எனச் சொல்ல, அதனை நீக்கிவிட்டோம். அதனால், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், விவாதிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த பேப்பரை யாரோ ரிலீஸ் செய்துவிட்டனர். அதனால் வந்த குழப்பம் இது'' ‘’ என்கிறார். 


 

இந்த நிலையில் தீர்மானம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால், "கூட்டணிக்குள் சிக்கலா' என்கிற  விவகாரம் குறித்து, காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம் கேட்டபோது, ""நிர்வாகிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தனது கருத்தினை வெளிப்படுத்தியிருக் கிறார் அழகிரி. அது, கூட்டணிக்கு எதிரானது அல்ல. கூட்டணிக்கு எதிராக அவர் பேசவும்மாட்டார். தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தலைமையும் தி.மு.க. தலைமையும் இணைந்து முடிவெடுக்கும். கூட்டணி வலிமையாகவே இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.  

 

tkse


 

இந்த விவகாரத்தில் அறிவாலயத் தின் கருத்தறிய தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி.யிடம் பேசியபோது, ""காங்கிரஸ் ஜெயித்த தொகுதி என்பதால் நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதை தவறு என சொல்ல முடியாது. விருப்பங்கிறது அவர்களின் உரிமை சார்ந்த விசயம். அதேசமயம், நாங்குநேரி யாருக்கு என்பதெல்லாம் இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அப்போது இரு கட்சிகளின் தலைமையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கிறார் இயல்பாக. 
 

தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி.க்களின் கருத்துக்கள் இப்படி இருந்தாலும், தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களோ, "கூட்டணியிலிருந்து காங்கிரசை கழட்டிவிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது தி.மு.க. தலைமை' என்கின்றன. 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.