Skip to main content

தற்கொலையா? நிர்பந்த மரணமா? கஃபே காபி டே ஓனரின் துயர முடிவு!

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

"கஃபே காபி டே' நிறுவனரும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தாவின் மரணம், இந்திய தொழிலதிபர்களையும் தொழில் முனைவோர்களையும் கொஞ்சம் நடுங்க வைத்திருக்கிறது. பெங்களூருவில் தொடங்கி சர்வதேச நாடுகள்வரை புகழ்பெற்ற நிறுவனம் "கஃபே காபி டே'. மணிக்கணக்கில் நேரம் செலவிடும் வசதிக்காக வும், வைஃபை வசதிக்காகவும் காதலர்கள், இளைஞர்கள், சுயதொழில் முனைவோர் காபி டேயைத் தேடிவந்து காபி ஆர்டர் செய்தனர். அதனுடைய கிளைகள் இன்று 1700-ஐயும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றன.

 

siddharth



காபியில் தொடங்கி தகவல் தொழில்நுட்ப துறைக்கும் நகர்ந்த சித்தார்த், "மைண்ட் ட்ரீ' என்னும் அவுட்சோர்சிங் பணிகளைச் செய்துகொடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமத்தில் ஒருவராகி, வெற்றிச்சிகரத்தின் உச்சியை நோக்கி மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தார். வியாபாரம் என்பது வளர்ச்சியும் சரிவையும் உள்ளடக்கியது தானே. சித்தார்த்தா, சில சரிவுகளைச் சந்திக்க ஆரம்பித்தார். அதோடு, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் தடைக்கல் அவரது வழியை மறித்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டது. கிட்டத் தட்ட அதேசமயத்தில் கஃபே காபி டே கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.
 

siddharth



அந்த சோதனைக்குப் பின், அரசுக்குக் கட்டவேண்டிய வருமான வரியில் சித்தார்த்தா முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச் சாட்டு எழுந்தது. 300 கோடி வருமான வரி கட்டவேண் டிய இடத்தில் வெறும் 36 கோடி வருமான வரி மட்டுமே செலுத்தி ஏய்த்திருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து அவரது சொத்துக்கள் பலவற்றை அட்டாச்மெண்ட் செய்து விற்பனைசெய்ய இயலாதபடி முடக்கியது வருமான வரித்துறை. கஃபே காபி டேயைக் கூட கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்க முயற்சிகள் நடந்ததாகக் கூறப்பட்டது.
 

siddhartha



இதனால் மிகுந்த மனநெருக்கடியிலிருந்த சித்தார்த்தா, கடந்த செவ்வாயன்று மங்களூர் செல்லும் வழியில் காரை நிறுத்தி, ஓட்டுநரை சற்று நேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு செல்போனுடன் இறங்கிச்சென்றார். சற்றுநேரத்துக்குப் பின் ஓட்டுநர் தொடர்புகொள்ள முயன்றபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சற்றுநேரம் காத்திருந்த ஓட்டுநர் அவரது குடும்பத் துக்குத் தகவல் சொல்ல... நாடே பரபரப்பானது. நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரைத் தேடி மீட்புப் படையினர் வந்திறங்கினர். ஆனால் மறு நாள் மதியம்தான் அவரது உடல் மீட்கப்பட்டது.


சித்தார்த்தாவின் மரணம் அதிர்வலைகளை மட்டுமின்றி, அரசியல் சர்ச்சைகளையும், விடைதெரியாத கேள்விகளையும் எழுப்பத் தொடங்கியிருக்கிறது. வருமான வரித்துறையின் முன்னாள் டிஜி ஒருவர்தான் தனக்கு நேர்ந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என மரணத்துக்கு முன்னால் எழுதிய கடிதமொன்றில் சித்தார்த்தா தெரிவித்திருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தில் காணப்படும் கையெழுத்துக்கும், ஆண்டு வருமானவரி கணக்கை தாக்கல் செய்திருக்கும் கோப்புகளில் காணப்படும் சித்தார்த்தாவின் கையெழுத்துக்கும் வித்தியாசமிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகமெழுப்பு கின்றனர். காவல்துறையோ "ஐ.டி. அதிகாரிகள் இன்னும் இந்தக் கடிதத்தை முறையாக பரிசோதனையே செய்யவில்லை. அதற்குள் கையெழுத்து வித்தியாசம் எப்படித் தெரிந்தது என கேள்வியெழுப்புகின்றனர். எனினும் சந்தேகம் எழுந்தால் பாரன்சிக் துறை மூலம் கையெழுத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்வோம்'' என்கின்றன.

வி.ஜி.சித்தார்த்தாவின் இறுதிச் சடங்குகள் அவரது தந்தையின் பேலூர் காபி எஸ்டேட்டில் நடந்து முடிந்திருக்கின்றன. சித்தார்த்தாவின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 25,000 கோடி வரை இருக்கையில், 7000 கோடி கடனுக்காகத் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்ற கேள்வி உறுத்தலாகத்தான் இருக்கிறது. ’A lot can happen over a cup of coffee’ என்பதுதான் "கஃபே காபி டே'யின் பிரபலமான விளம்பர வாசகம். தனது இக்கட்டுகளிலிருந்து மீளும் வழியும் அதில் அடக்கம் என அவர் ஏன் நம்பியிருந்திருக்கக்கூடாது என்கிறார்கள் அவரது மரணத்தை விரும்பாதவர்கள்.
 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.