Skip to main content

4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி! சாத்தியமானது எப்படி?

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

ghmc

 

 

நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பாஜக மற்றும் ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போன்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு இன்பதிர்ச்சியாகவும் அமைந்திருக்கும்.

 

இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சியாக செயல்பட்டு வருவது ஹைதராபாத். அப்படிப்பட்ட மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெறுவது என்பது தேசிய கட்சிகள் அந்த மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமானது, கௌரவமானது என்று பல கோணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே கண்டிப்பாக கடுமையான போட்டி நிலவும், அப்படிதான் இங்கும் நிலவியது. 

 

மொத்தம் 150 வர்டுகளுக்கு நடைபெற்ற இந்த மாநகராட்சி தேர்தலில் 149 வார்டுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வார்டின் முடிவு வெளியாகவில்லை. இந்தத் தேர்தலில் தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி 55 வார்டுகளில் வெற்றிபெற்று, அதிக வார்டுகளில் வெற்றிபெற்ற கட்சியாக இருந்தாலும் இது ஒரு மிகப்பெரிய சரிவு. ஆமாம், கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் 44 வார்டுகள் குறைவாக வென்றுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பாஜக, 48 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் மட்டும்தான் வெற்றிபெற்றிருந்தது. ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 44 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையான 44 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

பாஜகவின் இந்த அசூர வளர்ச்சி பலரையும் வாய்பிழக்க செய்துள்ளது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அமித்ஷா, யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி, ஜே.பி. நட்டா ஆகிய அனைவரும் ஹைதராபாத்தில் முகாமிட்டார்கள். எப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை மாநகராட்சி பிரச்சாரம் சூடுப்பிடித்தது. பாஜக ஒரு பக்கம் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஹைதராபாத்தின் பழமை வாய்ந்த பெயரான பாக்யாநகர் பெயர், பாஜக ஆட்சியில் ஹைதராபாத்தை என்ற பெயரை தூக்கிவிட்டு சூட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையானது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ஆர், நமக்கு எதிரியல்ல என்பதை தெரிந்துகொண்ட பாஜக, ஒவைஸியை தாக்கியே பிரச்சாரம் செய்தது. அதேபோல கே.டி.ஆருக்கு பதிவிடுவதும், ஓவைஸிக்கு பதிவிடுவதும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்தது. இதன் மூலமாக இந்துக்களின் வாக்கு வங்கியை அள்ளியது. இந்த தேர்தலில் பாஜகவின் இப்படியான பிரச்சாரங்களால் மத அரசியல் நன்கு கலக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஹைதராபாத் பல தரப்பு மக்களும், இந்தி, உருது பேசுபவர்களும் அதிகம் இருப்பதனால் வாக்கு அரசியலுக்காக வெறுப்பு பிரச்சாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபடாது. என்னதான் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறைந்தளவிலான தொகுதிகளில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக வாக்குகளை பிரிப்பதால் அடுத்த தேர்தல்களில் அது அவர்களுக்கு தலைவலியாக மாறலாம்.

 

2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆளும் கட்சியான பிறகு மத அரசியல், பிளவு என்பது பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. அதன்படிதான் தெலங்கானாவில் பாஜக இந்த முக்கியமான தேர்தலில் 12 மடங்கு வளர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக தங்களின் பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை, மக்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கையின்றி இருப்பதன் வெளிப்பாடாகவே இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கிறது. மத்தியில் பாஜகவுக்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஏற்கனவே வலுவாக இருந்த ஓர் மாநிலத்தில் மிகவும் மோசமாக வலுவிழந்திருக்கிறது. தலைவர் யார்? உட்கட்சி பூசல், ஜூனியர் சீனியர் மோதல் என்று நாட்டு பிரச்சனைக்கு சமமாக கட்சிக்குள்ளும் ஒரு பிரச்சனையை வைத்திருக்கிறது காங்கிரஸ், அதன் வெளிபாடுதான் காங்கிரஸின் தொடர் தோல்வி. அப்படியே அவர்கள் வெற்றிபெற்றாலும் சூழ்ச்சியில் விழும் அளவிற்குதான் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சிலரை வைத்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து வலுவாக இருந்த டி.ஆர்.எஸ். கட்சியின் பலத்தை சோதித்துபார்த்த பாஜக, அவர்களின் 2023ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி கனவை சின்னாப்பின்னமாக உடைத்திருக்கிறது.

 

தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற பகுதிக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மொத்தம் 120 தொகுதிகள் எனும்போது, இந்த பகுதிக்குள் 20 சதவீத தொகுதிகள் அடங்குகிறது. தற்போதைய மாநகராட்சி தேர்தல் வெற்றியை பார்க்கும்போது, பாஜக இந்த பகுதிகளுக்குள் 7 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிலாபாத், கரிம் நகர் மற்றும் நிஜாமாபாத் உள்ளிட்ட வட தெலங்கானா பகுதி தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருப்பதன் மூலம் பாஜக வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கிறது. தெலங்கானாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாஜக நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணியாக இருப்பது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சி. அதற்கு ஒரு உதாரணம் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஹைதராபாத் வந்தபோது நடந்த பேரணியைக் குறிப்பிடலாம்.

 

மேற்கு வங்கத்தில் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் நிலையை எட்டியது பாஜக, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து 18 தொகுதிகளில் வெற்றியைக் கண்டது. இதற்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் திட்டமிட்டுதல், பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியல் போன்று அவர்களின் அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் யாராலும் அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மம்தாவை பாஜக அசைத்து பார்த்திருக்கிறது. திரிணாமூல் vs காங்கிரஸ் என்பதை திரிணாமூல் vs பாஜக என்று அனைத்துவிதமான களத்திலும் மாற்றி அமைத்திருக்கிறது.

 

கலவரத்தில் தொடங்கி தேர்தல் களம் வரை இருவரும் எதிர், எதிர் என்றாகிவிட்டது. அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது பாஜக. இதேதான் ஒடிஷா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்கட்சியாக இருக்க காரணம் என்று புரியவைக்கிறது. எங்கெல்லாம் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருந்ததோ, அங்கெல்லாம் பாஜக தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.