Skip to main content

அதிகாரம் எடப்பாடியிடம் குவியக்கூடாது..! அதிமுக சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள் போட்ட பிளான்..!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
admk

 

 

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராக நேரடியாக மோதலை துவக்கிய ஓ.பி.எஸ்., கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைப்போம், அங்கீகாரம் குறித்து அதில் தீர்மானிக்கலாம் என்பதில் பிடிவாதம் காட்டினார். அ.தி.மு.க. தலைமையின் அதிகார மோதல்கள் சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? சாதக- பாதகம் என்ன? என தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைகள் விவாதிக்கிற அளவுக்கு பிரச்சனை தீவிரமானது.

 

செயற்குழுவிற்கு பிறகு, எடப்பாடி தலைமையில் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகளை முற்றிலுமாக புறக்கணித்தார் பன்னீர்செல்வம். இதனால் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து, "தலைமை குறித்து நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக, அரசு சார்ந்த நிகழ்வுகளை தவிர்க்காதீர்கள்'' என சொல்ல நினைத்திருந்தார் எடப்பாடி. ஆனால், அவரது ஆதரவு அமைச்சர்கள், அதனை தடுத்துவிட்டனர்.

 

காந்தி ஜெயந்தி விழாவில் கவர்னர் கலந்து கொண்டதால் அதனை ஓ.பி.எஸ்.ஸால் புறக்கணிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் இருவரும் அருகருகே இருந்தும் பேசிக்கொள்ளவோ, மரியாதை நிமித்தம் புன்முறுவல் செய்துகொள்ளவோ இருவரும் விரும்பாமல் இறுக்கமாகவே இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் தன்னை சந்திக்கவந்த தம்பிதுரையிடம் பேசிவிட்டு, தேனிக்கு புறப்பட்டு சென்றார் ஓ.பி.எஸ். அங்குள்ள தமது பண்ணை வீட்டில் அவர் ஓய்வெடுக்க, தேனி மாவட்டம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் பண்ணை வீட்டுக்கு படையெடுத்தனர். யார் யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுத்தபடி இருந்தது உளவுத்துறை. ஓ.பி.எஸ்.ஸிடம் அவரது ஆதரவாளர்கள், "நீங்கள் தீர்மானித்த முடிவில் உறுதியாக இருங்கள். உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். நீங்கள்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும்'' என தூபம் போட்டபடி இருக்கிறார்கள். அதற்கு சீரியசாக எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை ஓ.பி.எஸ்.

 

அக்டோபர் 7-ல் என்ன நடக்கும் என இரு தரப்பு சீனியர்களுக்கும் நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது, "கட்சியில் செயற்குழு, பொதுக்குழு இரு அமைப்புகளிலும் எடப்பாடிக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனை மேலும் அதிகரிக்க செய்ய கடந்த 6 மாதங்களாகவே நிறைய நடவடிக்கைகளை எடுத்து முடித்திருக்கிறார். கட்சிக்கு வழிக்காட்டும் குழு அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். விரும்பினாலும், எடப்பாடி உருவாக்கி வைத்திருக்கும் வலிமை ஓ.பி.எஸ்.ஸை யோசிக்கவே செய்தது. அதனால் அழுத்தம் கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. எடப்பாடியுடன் சமாதானமாகப் போகவே விரும்பியிருந்தார்.

 

ஆனால், வன்னியர் லாபியை கணக்குப் போட்டு சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார் ஓ.பி.எஸ். அதன்பிறகே, வழிகாட்டும் குழு அமைப்பதில் அதிக அழுத்தமும் தீவிரமும் காட்டுகிறார். குறிப்பாக, அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக இருந்தார் ஜெயலலிதா. இருப்பினும் கட்சியின் முடிவுகள் ஆட்சி மன்ற குழுவில் வைத்து அதன் ஒப்புதலை பெற்றே அவர் அறிவிப்பார். 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதும், ஒரு வகையில் முந்தைய ஆட்சி மன்றக் குழு போன்றதுதான்.

 

அதனால், அதிகாரமிக்க வழிகாட்டும் குழு அமைப்பதில் உறுதியாக இருங்கள் என ஓ.பி.எஸ்.ஸுக்கு பண்ருட்டியார் யோசனைத் தெரிவித்திருக்கிறார். அப்படி குழு அமைக்கப்பட்டு அதில் உங்களின் ஆதரவாளர்கள் இருந்தால் மட்டுமே உங்களுக்கான எதிர்காலம் வலிமையாகும் எனவும் அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்தே, வழிகாட்டும் குழு அமைத்தால் மட்டுமே எடப்பாடியின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்பதால் அதனை அமைப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறார் ஓ.பி.எஸ்.

 

அதாவது, தேர்தல் கால முடிவுகள் மற்றும் கட்சியின் கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு வழிகாட்டும் குழுதான் அதிகாரமிக்கதாக இருக்கும். அந்த வகையில், 11 பேர் கொண்ட அந்த குழுவில் எடப்பாடி சார்பில் 6 பேரும், பன்னீர் சார்பில் 5 பேரும் இடம் பெற்றாக வேண்டும். இந்த குழுவில் சீனியர்கள் பலரும் இடம்பிடிக்க துடிக்கின்றனர். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த தம்பிதுரை, பொன்னையன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேர் விரும்புகின்றனர். இந்த 5 பேருக்கும் இடமளித்தால் சாதி ரீதியிலான பிரச்சனை தனக்கு எதிராக திசைத் திருப்பப்படுவதுடன் தங்கமணி, வேலுமணியைத் தவிர மற்ற மூவரும் தன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

 

அந்த சூழல் வந்தால், ஓ.பி.எஸ்.ஸுக்கு இயல்பாகவே வலிமை கூடிவிடும். அதனால் அந்த 5 பேரில் தங்கமணி, வேலுமணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்க விரும்புகிறார் எடப்பாடி. ஆனால், சீனியர்கள் 3 பேரையும் தவிர்த்துவிட்டு இவர்களுக்கு வாய்ப்பளித்தால் அப்போதும் அந்த மூன்று சீனியர்களும் ஓ.பி.எஸ். பின்னால் சென்றுவிட்டால் அதுவும் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். தவிர, முதல்வர் வேட்பாளர் என்கிற தனது கனவுக்கு வலிமை சேர்க்க வேண்டுமெனில் அவரை நம்பியுள்ள வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார்கள், தாழ்த்தப்பட்டோர் என மாற்று சமூக சீனியர்களுக்கும் அவர் வாய்ப்பளித்தாக வேண்டும். ஆனால், அதிலும் சிக்கல் இருக்கிறது.

 

மேலும், வழிகாட்டும் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன் மாதிரியான சாணக்கியர்களை ஓ.பி.எஸ். உள்ளே கொண்டு வந்துவிட்டால், தான் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் வழிகாட்டும் குழுவில் ஒப்புதல் கிடைக்காது என்கிற பயமும் எடப்பாடிக்கு உண்டு. இதையெல்லாம் உணர்ந்துதான் வழிகாட்டும் குழு அமைக்க உடன்பட மறுக்கிறார் எடப்பாடி. இந்த சிக்கல்களை அறிந்ததால்தான், வழிகாட்டும் குழுவை வைத்து எடப்பாடியின் கனவுக்கு வேட்டு வைக்க வேண்டும் என கங்கணம் கட்டி அக்குழுவை அமைப்பதில் பிடிவாதம் காட்டுகிறார் ஓ.பி.எஸ்.'' என்கின்றனர் சீனியர்கள்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர், பன்னீரின் வழிகாட்டும் குழு ஆகியவைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தீவிரமாக ஆலோசிக்கிறார்கள். இதுகுறித்து அமைச்சர்கள் தரப்பில் உள்ள சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற போட்டியில் எடப்பாடியைத்தான் அமைச்சர்கள் அனைவருமே ஆதரிக்கிறார்கள். ஏனெனில், கடந்த நான்காண்டுகளில் அமைச்சர்களுக்கும் அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் தேவையானதை குறை வைக்காமல் பூர்த்தி செய்தே வந்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், ஓ.பி.எஸ்.ஸோ தன்னை நம்பியவர்களுக்குகூட அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்கிற ஆதங்கம் அவர்மீது இருக்கிறது. அதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடிக்குத்தான்.

 

அதேசமயம் எடப்பாடியிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருப்பதை அமைச்சர்கள் விரும்பவில்லை. "இன்றைக்கு நல்ல பிள்ளையாக தெரியும் எடப்பாடி, மீண்டும் அ.தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது எடப்பாடியின் முகம் மாறும்; கொங்கு வேளாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்' என நினைக்கின்றனர். அதனால் அதிகாரம் எடப்பாடியிடம் குவியக்கூடாது என விரும்பும் அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், ஓ.பி.எஸ்.சின் வழிகாட்டும் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு பச்சைக் கொடி காட்டுகின்றனர். இதனை எடப்பாடியிடமே நேரடியாக பேசிய அவர்கள், "முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான்; அதே சமயம் வழிகாட்டும் குழு அவசியம். அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்பதை வலியுறுத்துகின்றனர். இதனால் இடியாப்பச் சிக்கலில் இருக்கிறார் எடப்பாடி என்று விவரிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என இருவரும் கலந்து பேசி அக்டோபர் 7-ந் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்த கே.பி. முனுசாமி போன்ற மத்தியஸ்தர்கள்தான், ஞாயிற்றுக்கிழமை வரை இதற்கு முடிவு தெரியாததால் தடுமாறிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே இருவரையும் பேச வைக்கவும், சந்திக்க வைக்கவும் முயற்சிகளையும் எடுத்தனர் சீனியர்கள். இருவரையும் சமாதானப்படுத்தி இருவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும் என்கிற நம்பிக்கையில் போராடினர் மூத்த தலைவர்கள்.  

 

மூத்த தலைவர்களின் முயற்சியால் கடந்த 7ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிர்வாகிகள் முன்பு பேசினார்கள். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், ரா.கோபாலகிருஷ்ணன், கி.மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.