Skip to main content

முத்தலாக்கில் அதிமுகவின் இரட்டை நாக்கு!

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

இஸ்லாமியர்களின் சிறப்பு உரிமை ஒன்றை பறித்திருக்கிறது பாஜக அரசு. அதுவும் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி, அதற்கு தண்டனை பெற்றுத்தருகிற வகையில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமில் பெண்களுக்கு எதிரான விதிகள் இருப்பதைப் போலவும் அதில் ஒன்றை சீரமைத்திருப்பதைப் போலவும் காட்டியிருக்கிறது மோடி அரசு.
 

muslim ladies

 

 

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதைப் போல மோடி அரசு மார்தட்டுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி தின்றார்கள் என்றும், ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்தார்கள் என்றும் கும்பலாகச் சேர்ந்து வெறித்தனமாக கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை ஏன் மோடி அரசு காதில் வாங்கவில்லை என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதால் இந்தியாவே மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறியிருப்பதை பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள். அதாவது, இஸ்லாம் மீது வெறுப்பு கொண்ட பாஜக மகிழ்ச்சி அடைகிறது என்பதையே இந்தியா மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கிய கட்சி தங்களுடையது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இஸ்லாமியர் ஜனாதிபதி ஆனாலும், தலித் ஜனாதிபதி ஆனாலும் இந்து சாமியார் முன் தரையில்தான் அமர வேண்டும் என்ற நிலை இருப்பதை சொல்லவே மாட்டார். முத்தலாக் மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துள்ளன. தேர்வுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையயும் விடுத்தன. அதையும் மீறி வாக்கெடுப்புக்கு விட்டு, எதிர்த்த சில கட்சிகளை வெளிநடப்புச் செய்யவைத்து மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இதை தனது சாதனையாக வேறு பாஜக அரசு கூறிக்கொள்கிறது.

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட நிலைப்பாடுதான் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது. மக்களவையில் இந்த மசோதா வந்தபோது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால், அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத்குமார் இந்த மசோதாவை ஆதரித்து பேசி அதிர்ச்சியைக் கொடுத்தார்.
 

opr


“இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும். இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்துப் பெண்களுக்கும் சமஉரிமை வழங்கிட ஏதுவாக இருக்கும்” என்று அவர் பேசினார்.

இதுகுறித்து அதிமுகவில் பெரிய புகைச்சலே உருவானதாக கூறப்பட்டது. பாஜகவுக்கு பயந்து சிறுபான்மையினரை விட்டுக்கொடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் அதிமுகவின் நிலைப்பாடு தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அவர் கூறியபடியே, மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை எதிர்த்து பேசினார்.

“முத்தலாக்கிற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமில் முத்தலாக்கிற்கு அனுமதி இல்லை என்று அரசு சொல்கிறது. எனவே, இல்லாத ஒரு விஷயத்திற்கு எதற்காக சட்டம்? இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் பேசினார்.

இப்படி பேசிய அவர், மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தபோது தனது கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும் 84 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருந்தால் மசோதா தோற்றிருக்கும்.
 

navaneetha

 

 

அதிமுகவின் இந்த நிலைப்பாடு வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்துத் தெரிவித்தார். முத்தலாக் விஷயத்தில் பாஜகவுக்கு பயந்து இரட்டை நிலை எடுத்த அதிமுக, இறுதியில் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவெடுத்தது, அம்பலப்பட்டிருக்கிறது. அதிமுவை நம்பிய சிறுபான்மை இன மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருக்கிறது என்று இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.