Skip to main content

அண்ணாத்த சரவெடியா..? புஸ்வானமா..? - விமர்சனம்

Published on 04/11/2021 | Edited on 04/11/2021
bfdsdfsb

 

கரோனா இரண்டாம் அலை தளர்வுக்கு பின் 100% ரசிகர்களை அனுமதிக்கும் திரையரங்குகள், பேட்ட படத்துக்கு டப் கொடுத்த விஸ்வாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு சிவாவுடன் கூட்டணி அமைத்த ரஜினி, மீண்டும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் கமர்சியல் படத்தில் நடிக்கும் ரஜினி, அதுவும் தீபாவளி ரிலீஸ் என, இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள அண்ணத்த திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் வரவேற்ப்பை பெற்றுள்ளதா..?

 

கிராமத்தில் ஊர் பிரசிடன்ட் ஆக இருக்கும் அண்ணாத்த ரஜினி தாயில்லா பிள்ளையான தன் தங்கை தான் உலகம் என வாழ்கிறார். அவரது தங்கையான கீர்த்தி சுரேஷ் வடநாட்டில் படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் ரஜினி. அந்தத் திருமணம் பிடிக்காத கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு முதல் நாள் தன் காதலனுடன் கொல்கத்தாவுக்கு ஓடி விடுகிறார். போன இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுகிறது. தங்கையைத் தேடி கொல்கத்தா செல்லும் ரஜினி கீர்த்தி சுரேஷை சந்தித்தாரா, இல்லையா? கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே அண்ணாத்த படத்தின் மீதி கதை.

 

hfhfdh

 

வேதாளம் படத்தை விஸ்வாசம் டைப்பில் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அண்ணாத்த படத்தை உருவாகியுள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா. இந்தக் கதைக்காக அதிகம் மெனக்கெடாத அவர் ரஜினியை மட்டுமே மையமாக வைத்து அவர் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தி திரைக்கதை அமைத்துள்ளார். அதில் வெற்றி பெற்றாரா என்றால்? ஆங்காங்கே கொஞ்சம் சிரமப்பட்டே வென்றிருக்கிறார்! முதல் பாதி முழுவதும் 90ஸ் ரஜினியை பார்க்க முடிகிறது. அந்த அளவு ஃபேமிலி சென்டிமென்ட்டோடு கலகலப்பாக படம் நகர்கிறது. இரண்டாம் பாதி முழுவதும் தங்கை பாசம் மற்றும் ஆக்சன் காட்சிகள் என சற்று பரபரப்பு குறைவாக, நெகிழ்ச்சியான  சென்டிமென்ட் காட்சிகளோடு படம் நகர்ந்துள்ளது. முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாம் பாதியில் சற்று குறைவாக இருந்து அயற்சியை ஏற்படுத்தியுள்ளது.  இருந்தும் ரஜினி என்ற ஒற்றை மந்திரம் படம்  முழுவதும் ஆக்கிரமித்து அதை எல்லாம் மறக்கச் செய்து படத்தை எங்கேஜிங்காக வைத்து ரசிக்க வைத்துள்ளது. ரஜினிகாந்த் படம் முழுவதும் வருவது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. இருந்தும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

 

jtjtj

 

ரஜினியிடம் இன்னமும் அதே சுறுசுறுப்பு, அதே ஸ்பீட், அதே துருதுரு நடிப்பு,  அதே எனர்ஜி, அதே டைமிங் காமெடிகள் என இன்னமும் ரசிகர்களை தன் மாயாஜால ஸ்கிரீன் பிரசன்ஸ்ஸால் அப்படியே இறுக்கி கட்டிப் போட்டு வைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளிலும் சரி, காமெடி காட்சிகளிலும் சரி நடிப்பில் அதகள படுத்தியுள்ளார். குறிப்பாக இந்தப் படத்தில் ஒரு படி மேலேயே போய் சென்டிமெண்ட் காட்சிகளில் பார்ப்பவரை கண்கலங்க வைத்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ? அவர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்த்தார்களோ அதை இந்த வயதிலும் சிறப்பாக செய்து அசத்தி இருக்கிறார்.

 

ரஜினிக்கு தங்கை என சொல்வதை விட இப்படத்தின் கதாநாயகி என்று கீர்த்தி சுரேசை சொல்லவேண்டும். அந்த அளவு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார். அதை எப்போதும்போல் சிறப்பாகவும் செய்து அசத்தியுள்ளார். கலகலப்பான நடிப்புக்கு பெயர் போன கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் அழுகாச்சியாக நடித்திருந்தாலும் பல அண்ணன்களின் மனதை கலங்கடித்துள்ளார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

 

படத்தின் இன்னொரு நாயகி நயன்தாரா ரஜினிக்காக தன் போர்ஷனை காம்பிரமைஸ் செய்து நடித்துள்ளார். குறைவான காட்சிகளில் அவர் தோன்றினாலும் மனதில் பதிகிறார். ரஜினியின் பழைய கதாநாயகிகளான குஷ்பூ மீனா ஆகியோர் தங்களது பங்குக்கு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் வர காட்சிகள் தியேட்டர்களில் சிரிப்பலைகள் கியாரண்டி.

 

bfbfbh

 

ரஜினியுடன் படம் முழுவதும் பயணிக்கும் சூரி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிக்கும் படியான காமெடி செய்து ரசிக்க வைத்துள்ளார். என்னதான் ரஜினி படம் என்றாலும் சூரிக்கு என்று சரியான ஸ்பேஸ் கிடைத்துள்ளது. அதை அவர் சரியாகவும் பயன்படுத்தியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். படத்தில் மொத்தம் இரண்டு வில்லன்கள். ஒருவர் தெலுங்கு டைப் வில்லன், மற்றொருவர் ஹிந்தி டைப் வில்லன். இதில் எந்த டைப் வில்லன் ரசிகர்களுக்கு பிடிக்கிறதோ அவர்களுக்கு அந்த வில்லன் ரசிக்க வைப்பார். மற்றபடி படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

 

hthfh

 

ரஜினிக்கு பிறகு படத்தின் இன்னொரு கதாநாயகன் டி இமானின் இசை என்றே சொல்லவேண்டும். அந்த அளவு பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி ஒரு பண்டிகைக்கு வெளியாகும் படத்திற்கு என்ன தேவையோ அதை அதிரடியாக கொடுத்து கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார். அதேபோல் சென்டிமென்ட் காட்சிகளிலும் சரியான பின்னணி இசையை பயன்படுத்தி கண்கலங்க வைத்துள்ளார். ரஜினிக்கு எந்த மாதிரியான ஆங்கில்கள் வைத்து மாஸ் சீன்களை உருவாக்க முடியும் என்பதை காட்சிக்கு காட்சி மெனக்கெட்டு சிறப்பாக அமைத்து ரசிகர்களிடம் கை தட்டு பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. பல இடங்களில் இவரது கேமரா மொமண்ட்ஸ் கூஸ்பம்ஸ் ஏற்படுத்துகிறது. எடிட்டர் ரூபன் படத்தின் நீளத்தில் சற்று கவனமாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் திரைக்கதையையும், ஒளிப்பதிவையும் சரியான கலவையில் கத்தரி போட்டு திறன்பட படத்தொகுப்பு செய்து படத்துக்கு வேகம் கூட்டியுள்ளார்.

 

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை  யுகிக்கும்படியான திரைக்கதையாக அமைந்திருந்தாலும் அவை ரசிக்கும்படி இருந்து படத்தை கரை சேர்த்துள்ளது. அதேபோல் சில பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த துறு துறு ரஜினியை இந்த படம் மீண்டும் கொண்டுவந்துள்ளது அண்ணாத்த.

 

அண்ணாத்த - சென்டிமென்ட் சரவெடி!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!