தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது ‘அண்ணாத்த’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்துவருகிறார். அவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போதுவரை இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அந்த வகையில், நேற்று (27.06.2021) ரசிகர்களுடன் கலந்துரையாடுகையில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளவில்லை... எப்போது உங்கள் திருமணம்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன், "திருமணம் என்றால் நிறைய செலவாகும். அதற்காக தற்போது பணம் சேமித்துக்கொண்டிருக்கிறேன். மேலும், கரோனா பாதிப்பு குறைவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" எனப் பதிலளித்தார்.