Skip to main content

லியோ படத்திற்கு சிறப்புக் காட்சி - ரசிகர்கள் கொண்டாட்டம்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

special shows granted for leo movie

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். 

 

இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

 

இப்படி தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் படக்குழு நேற்று புது சிக்கலில் சிக்கியது. படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் தராமல் இருந்ததாகவும் இது பற்றி தயாரிப்பு தரப்பிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை எனவும் புகார் கொடுத்த கலைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர்களுக்கும், நடனக்கலைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இந்த நடனக் கலைஞர்கள் புகாரை ஃபெப்சி தலைவர் செல்வமணி மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ட்ரைலரில் இடம்பெற்ற அந்த சர்ச்சையான வசனம் தற்போது மியூட் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது பாடலான 'அன்பெனும்...' பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதனிடையே மதுரையில் 18ஆம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளதாக போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் சம்மந்தப்பட்ட திரையரங்கள் தெரிவித்துள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் இதே போல் போலி டிக்கெட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், முதல் நாளான 19 ஆம் தேதி மட்டும் கூடுதல் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணி காட்சியும் மேலும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 7 மணி சிறப்பு காட்சியும் திரையிட படக்குழு சார்பில் தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து, ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் என மொத்தம் 6 நாட்களுக்கு அதாவது, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதோடு ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு படதிற்கு, முதல் நாள், நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் லியோ படத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்