மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.
இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.
சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.