Skip to main content

நடிகை தற்கொலை விவகாரம் - காதலன் மீது தாயார் பகீர் குற்றச்சாட்டு

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

actress  akanksha dubey case update

 

பிரபல போஜ்புரி நடிகை ஆகன்ஷா துபே (25) கடந்த 26ஆம் தேதி (26.03.2023) உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அங்கு அவர் நடித்து வந்த ‘லைக் ஹூன் மெயின் நலைக் நஹீன்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றார். திரைப்படங்கள் அல்லாது பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு, அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நடனமாடிய படி வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேரலையில் ரசிகர்களிடம் பேசிய அவர் அழுது கொண்டிருந்தார். அடுத்த நாள் அவர் இறந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

 

இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் சம்பவ இடத்தில் இறப்பிற்கான கடிதம் எதுவும் தென்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

இந்த நிலையில் ஆகன்ஷா துபேயின் தாயார் மது துபே, தனது மகளின் மரணத்திற்கு இரண்டு பேர்தான் காரணம் என்று கூறியுள்ளார். சமர் சிங் மற்றும் சஞ்சய் சிங் மீது குற்றம் சாட்டியுள்ளார். சமர் சிங்கின் சகோதரர் சஞ்சய் சிங், ஆகன்ஷா துபேயைக் கொன்று விடுவதாக மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து வாரணாசி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகை ஆகன்ஷா துபே நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங்குடன் காதலில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.