Skip to main content

அழகான மாப்பிள்ளையால் கிடைத்த அவஸ்தையான வாழ்க்கை - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 15

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

  Advocate Santhakumari's Valakku En - 15

 

தன்னுடைய நீண்ட அனுபவத்தில் தான் சந்தித்த ஆச்சரியமான மற்றும் வித்தியாசமான வழக்குகள் குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அருணா என்கிற பெண்ணுடைய வழக்கு இது. அருணா ஒரு அழகான, எளிமையான பெண். பெற்றோருக்கு அவள் ஒரே பெண். அதனால் வீட்டில் செல்லம். திருமணம் ஒன்றுக்கு சென்றபோது குரு என்கிற அழகான இளைஞனை அவள் சந்திக்கிறாள். அந்தப் பையனைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தன் தந்தையிடம் கூறினாள். தந்தை தயங்கினாலும் தன்னுடைய முடிவில் அவள் உறுதியாக இருந்தாள். திருமணம் நடந்தேறியது.

 

நாட்கள் செல்லச் செல்ல அவளோடு அவன் சேர்ந்து இருக்கும் தருணங்கள் குறைந்தன. நண்பர்களோடு இருவரும் கொடைக்கானல் சென்றனர். அப்போது இவளோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளக் கூட அவன் மறுத்தான். ஏன் என்று கேட்டபோது அவள் அழகாக இல்லை என்று அவன் காரணம் சொன்னான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவன் வீட்டுக்கு வருவது குறைந்து போனது. 10 நாட்கள் ஆகியும் அவன் வரவில்லை. விசாரித்தபோது அவன் ஹைதராபாத் சென்றிருப்பதாக செய்தி கிடைத்தது. அங்கு சென்ற பிறகுதான் அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

 

ஹைதராபாத்தில் அவன் இன்னொரு பெண்ணோடு குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான். அருணாவை அவன் திருமணம் செய்துகொண்டதே சொத்துக்காகத் தான். எவ்வளவு அழுதாலும் அவன் வர மறுத்தான். அருணா எங்களிடம் வந்தாள். அவள் அவனோடு சேர்ந்து வாழ விரும்பினாள். அவன் மீது வழக்கு தொடர்ந்தோம். சில காலம் சேர்ந்து வாழ்ந்து பார்க்கச் சொன்னதற்கு அவன் சம்மதித்தான். அவன் பெயரில் பல சொத்துகளை எழுதி வைத்தார் மாமனார். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மீண்டும் ஓடிப் போனான்.

 

அதை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். மீண்டும் நோட்டீஸ் அனுப்பி அவன் வரவழைக்கப்பட்டான். இந்தப் பெண்ணோடு எனக்கு வாழ விருப்பமில்லை என்று தெரிவித்தான். குழந்தையோடு இருக்கும் அந்தப் பெண் அவனோடு தான் வாழ்வேன் என்கிற வைராக்கியத்தோடு இருந்தாள். ஹைதராபாத் பெண் மீதும் நாங்கள் புகார் கொடுத்தோம். அவள் வேலை செய்து வந்த அலுவலகத்திலும் புகார் கொடுத்தோம். வேலை போய்விடும் என்கிற பயத்தில் குருவை விட்டு அவள் விலகினாள். இன்று அருணாவும் குருவும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்பது தெரியவில்லை.