Skip to main content

விசித்திரமான முறையில் வீழ்ந்த மேத்யூஸ்! வங்கதேசத்திடம் தோற்ற இலங்கை!

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Mathews falls in a strange way! Sri Lanka lost to Bangladesh!

 

உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கை அணியின் மேத்யூஸ் புதிய முறையில் ஆட்டமிழந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

உலகக் கோப்பை 2023ன் 38 ஆவது லீக் ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இன்று (06.11.2023) நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. குசால் பெரேரா 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மெண்டிஸும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரு விக்கெட்டுகள் விழுந்தாலும் நிஷங்கா ஓரளவு அதிரடி காட்டினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சமரவிக்ரமா ஓரளவு நிலைத்து நின்றார். அவருக்கு கை கொடுத்த அசலங்கா சிறப்பாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும்போது, சமரவிக்ரமா 41 ரன்களுக்கு வெளியேறினார்.

 

அணியின் ஸ்கோர் 135-4 என்று இருந்தது. அப்போது தான் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அரிய நிகழ்வு நடந்தது. ஒரு வீரர் ஆட்டமிழந்து சென்ற 2 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களத்திற்குள் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது விதி. அதற்கு மேல் தாமதமானால் எதிரணி கேப்டன் அப்பீல் செய்து அந்த புதிய வீரரை பேட்டிங் செய்யாமலேயே ஆட்டமிழக்க செய்யலாம். அந்த அணியின் அனுபவ வீரர் மேத்யூஸ் களம் இறங்கி விட்டார். ஆனால் சரியான ஹெல்மெட் எடுத்து வராததால், வேறு ஹெல்மெட்டை எடுத்து வரச் சொல்லி பெவிலியனை நோக்கி கையசைத்தார். இதில் 3 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதனால் எதிரணி கேப்டன் ஷகிப் அவுட் என அப்பீல் கோரினார். ஆலோசித்த அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த மேத்யூஸ் விளையாடாமலேயே அவுட்டாகி வெளியேறினார். உலக கிரிக்கெட்டில் இந்த விதி இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்பட்டது கிடையாது. எனவே மேத்யூஸ் இந்த முறையில் அவுட் ஆன முதல் வீரரானார்.

 

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் டி சில்வா 34, தீக்‌ஷனா 22 என வீழ்ந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் அசலங்கா சதமடித்தார். அவரின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் டன்சிம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் இஸ்லாம் 2 விக்கெட்டுகளும், மிராஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசன் 9 ரன்னிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் வெளியேறினர். பிறகு இணைந்த ஷாண்டோ, ஷகிப் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுமையுடன் ஆடிய இருவரும் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாண்டோ 90 ரன்களில் ஆட்டமிழந்தார், ஷகிப் 82 ரன்களில் மேத்யூஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது மேத்யூஸ் நேரத்தைக் காட்டுவது போல் சைகை காட்டிய தருணம் சுவாரசியமாக அமைந்தது. இருப்பினும் பின்வரிசை வீரர்கள் உதவியுடன் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச அணி கேப்டன் ஷகிப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் இலங்கை அணி சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் மேத்யூஸ் ஆட்டமிழந்தது அணியின் தோல்வியில் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதால், அனுபவ வீரர் சிறுபிள்ளை போல நடந்து கொள்ளக் கூடாது என்று சரியான ஹெல்மெட் எடுத்து வராதது பற்றி கிரிக்கெட் விமர்சகர்களும், வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பின் செயல் ஜென்டில்மேன் விளையாட்டுக்கு அழகல்ல என்று ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

 

 

 

 

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.