Skip to main content

கீஹோல் சர்ஜரி செய்த தோனி; வெளியான தகவல்கள்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Dhoni undergoing surgery

 

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி முதல் நாளில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

 

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இந்த வெற்றியுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார். 

 

தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி குஜராத் உடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளம்மிங், “தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் காணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என்றார். இதன் பின்பே சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். சென்னை அணியின் முதல் போட்டியில் தோனி கலந்து கொண்டார். அப்போட்டியில் தோற்றாலும் தோனி விளையாடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

 

காலில் காயத்துடனே அனைத்து லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் முழுவதும் தோனி ரன்களை எடுப்பதற்கு சிரமப்பட்டதை காண முடிந்தது. தன்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என வீரர்களிடம் சொல்லி இருப்பதாக தோனி ஒரு லீக் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார். லீக் போட்டி ஒன்று முடிந்த பின் தோனி காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதும், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்த பின் ரசிகர்களுக்கு நன்றி செலுத்த மைதானத்தை சுற்று வந்த போதும் காலில் முழங்கால் கேப் உடனே வலம் வந்தார். இத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது. 

 

இந்நிலையில் தோனிக்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டிக்கு பின் குஜராத்தில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்ற தோனி அங்கு பிசிசிஐ மருத்துவக்குழுவில் உள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிருபரான டாக்டர் டின்ஷா பர்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார். டாக்டர் டின்ஷா பர்திவாலா ரிஷப் பந்த் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ஆலோசனை வழங்கியவர். 

 

இதன்பின்பே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த தோனி மும்பையில் உள்ள கோகிலா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சில காலம் ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “வியாழன் அன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார், வியாழன் அன்று காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னமாதிரியான சிகிச்சைகள் நடந்தது என்பது குறித்தெல்லாம் எனக்கு விவரங்கள் தெரியவில்லை” என்றார். 

 

இந்நிலையில் தோனிக்கு ஆர்த்ரோஸ்கோபிக் ரிப்பேர்" க்காக கீஹோல் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தோனி ராஞ்சிக்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுவதுமாக குணமடைய தனது வீட்டில் ஓய்வில் இருப்பார் என்றும் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர் உடல் ரீதியாக தயாராவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.