Skip to main content

திருமணத்திற்கான சுபமங்கள தேவதைகள் அடிக்கடி பிரசன்னமாகும் !

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

பெரும்பாலான குடும்பங்களில் தாய்மார்களுடைய மனபாரம் தங்கள் பெண் பிள்ளைகளைப் பற்றியதாகும். சில குடும்பங்களிலோ ஆண் பிள்ளைகளைப் பற்றிய கவலைதான் பெரிதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.கணவன்- மனைவி இருவருமே பணிபுரிதல், வீட்டு வேலைகள், கணவன் வேறெங்கோ பணிபுரிதல் என்று எத்தனையோ காரணங்களால், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்ப்பதை ஒரு பெரும் கடமையாகக் கொள்ள இயலாது போகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால், குழந்தை வளர்ப்பை ஆன்மப்பூர்வமாகக் கொள்வதே நன்று.பிள்ளைகள் சரியாக, முறையாக வளராமைக்குக் காரணம், நம் பண்டைய மரபுகளைப் பெரிதும் மறந்ததும், பெற்றோர்களே தம் தாய்- தந்தையரை முறையாகப் பேணாததும், முறையான வழிபாடுகளை, ஆலய தரிசனங்களைப் பெறாததும் ஆகும்.

samayapuram temple

பெற்றோர்களுக்கான எளிமையான தினசரி வழிபாடுகள் ஞாயிறுமுதல் சனிக்கிழமைவரை ஒவ்வொரு நாளிலும், குறைந்தது ஒரு நாழிகையாவது (24 நிமிடங்கள்) கணவன்- மனைவி இருவரும் ஒருங்கிணைந்து ஆலயம் செல்லுதல், வீட்டில் சேர்ந்து பூஜித்தல், தெய்வீக விஷயங்களை மட்டும் அந்த நேரத்தில் பரிமாறிக்கொள்ளல், இருவரும் சேர்ந்து மறைத்துதிகளை ஓதுதல், ஸ்ரீராமஜெயம் எழுதுதல், பூக்களைத் தொடுத்தல், சந்தனம் அரைத்தல் போன்றவற்றைத் திருமணவாழ்வின் ஆரம்பம் முதலே ஆற்றி வந்தால், இல்லறத்தில் சாந்தம் தவழத் தொடங்கும்.ஆனால், இந்த நிலையைப் பெறுவதற்கு பூர்வஜென்ம புண்ணிய சக்தி வேண்டும்.இதற்காகவே, தம்பதிகள் ஞாயிறுதோறும் ஸ்ரீமன் சூரியநாராயண சுவாமியையும், சூரிய கிரணங்கள் மூலவரின்மேல் படியும் ஆலயங்களிலும், தேவி மூலமூர்த்தியாக அருளும் தலங்களிலும் (சாக்கோட்டை உய்யவந்தாம்பாள், நாட்டரசங்கோட்டை கண்ணாத்தாள், சமயபுரம் மாரியம்மன்) வழிபடவேண்டும்.

amman temple

திங்களன்று சந்திரசேகரர், சோமநாதர், சந்திர மௌலீஸ்வரரையும், சந்திரமூர்த்தி தனித்த சந்நிதி கொண்டருளும் கோவில்களிலும், சிவபெருமான் சிலாவடிவத்தில் அருளும் தலங்களிலும் (நடராஜர், அர்த்தநாரீஸ்வரர்) வழிபடவேண்டும்.செவ்வாயன்று துர்க்கை, காளிதேவி, முருகப் பெருமானையும், ஈஸ்வரனுக்கு வலப்புறம் அம்பிகை அருளும் திருமணக்கோலம் மற்றும் தவக்கோலத் தலங்களிலும்;புதனன்று மேதா தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், ஞானசரஸ்வதி, விநாயகப் பெருமான், சயனக்கோலத் திருமாலையும்; வியாழனன்று தட்சிணாமூர்த்தி, அமர்ந்தகோல அம்பிகையையும், மலைத்தல மாமுருகனையும்;வெள்ளியன்று சுக்ரவார அம்பிகையையும், ஈஸ்வரியாய் தேவி அருளும் தலங்களிலும்;சனிக்கிழமையன்று பெருமாளையும், நவகிரக மூர்த்திகளையும், குன்றேறி அருளும் திருமாலையும் தரிசித்து, குறித்த மந்திரங்களையும் ஓதிவருதல் வேண்டும்.

கலியுகத்தின் இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் ஒவ்வொரு நாளும் இவ்வகையில் வழிபடுவதென்பது இயலாததாயிற்றே எனப் பலரும் எண்ணக்கூடும். இதற்குக் காரணம், தெய்வீகத்திற்கு முன்னுரிமையளிக்கும் உத்தம மனோபாவத்தை மனிதகுலம் இழந்து வருவதாகும். கேளிக்கைகள், சினிமா, தொலைக்காட்சி, ஹோட்டல், ஆடம்பரமான உடைகள், அழகு சாதனங்கள் போன்றவற்றுக்கு நேரத்தையும் பணத்தையும் தண்ணீராய்ச் செலவழிக்கும் மனிதன், தெய்வ வழிபாட்டுக்கும், ஆலய தரிசனத்திற்கும் நேரமில்லை என கூறுவது வேதனைக்குரியதே!அனைத்து மூர்த்தி வழிபாட்டுப் பலன்களையும் ஒருங்கே அளிக்கவல்ல அருந்தேவியே மனோன்மணி! வாலையோகச் சூத்திரங்களில், வாலை மனோன்மணியாகப் போற்றப்படும் தேவி கேதார்நாத் செல்லும் வழியில் அடிவாரத்தில் அருளும் தேவியாவாள்! அமாவாசையிலிருந்து பௌர்ணமிவரையிலும், பௌர்ணமியிலிருந்து அமாவாசைவரையிலும், ஒருவேளை மட்டும் உணவு, மஞ்சள் நிற ஆடை மட்டுமே தரித்தல், புலால் உண்ணாமை என்பதாக ஏதேனும் ஒருவகையிலேனும் விரதமிருந்து இருபட்சங்களிலும் தொடர்ந்து முறையாக வழிபட்டு வந்தால் திருமணவாழ்வில், தொழில்துறையில், பிள்ளைகளின் குணப்பாடுகளில் நல்ல முன்னேற்றம் கண்டிடலாம். மாதந்தோறும் ஒரு மலைத்தல வழிபாடு, கிரிவலமும் யோகப்பூர்வமான புண்ணிய சக்திகளைப் பெற்றுத்தரும். திருவண்ணாமலை போன்ற கிரிவல சக்தித் தலங்களில், விண்ணுலகங்களில் இருந்து நேரடியாகப் பெறவல்ல பல அபூர்வமான மூலிகா சக்திகள் தேவப் பிரகாசக் கதிர்களுடன் இணைந்து அருள்கின்றன.பலரும் அறியாத வகையில் மிகவும் அபூர்வமான பாறைசார் கிரிவலத் தலமாக திருப்பத்தூர்- சிங்கம்புணரி இடையே சதுர்வேதமங்கலம் அருகிலுள்ள அரளிப்பட்டி விளங்குகிறது. ஸ்ரீஆஞ்சனேய மூர்த்தி மானுட வடிவில் வலம்வந்த காந்தசக்தித் தலமாதலின், அரளிப்பட்டியில் பொலியும் காந்தசக்திகள் உள்ளம், மனம், உடலில் பொலிந்து தேவையற்ற பீதிகளை அகற்றி, வாழ்நாள் முழுதும் அருட்துணையாக அமையும்.காந்த சக்திகளுடன் கூடியதாய், சிவகங்கை அருகிலும் திருமலை உள்ளது. திருமலையில் பெறவல்ல தெய்வத் திருமணக்காட்சி மிகவும் அபூர்வமானதாகும். இவை யாவும் குடும்ப வாழ்வில் யோகப்பூர்வமான சாந்தத்தைத் தருவிக்க வல்லவையாகும்.

திருமணத்திற்கான சுபமங்கள தேவதைகள் அடிக்கடி பிரசன்னமாகும் திருத்தலமே திருமலையாகும். வேங்கடாசலபதி தலமான திருப்பதிக்கும் திருமலை என்ற பெயர் உண்டெனினும், இங்கு நாம் குறிப்பிடும் திருமலை சிவகங்கை அருகே உள்ளதாகும். திருமண வரம் வேண்டுவோர் இங்கு வெள்ளி, சித்திரை உத்திர நாள் மற்றும் மாதாந்திர உத்திர நாட்களில் வழிபடுதல் மிகவும் சிறந்த பலனளிக்கும். வசிஷ்டரும், வாலை யோகச் சித்தர்களும் மிகுந்த உபாசனா சக்திகளுடன் போற்றி வணங்கும் மகத்தான பூர்வ அம்பிகையான ஸ்ரீமனோன்மணி தேவி, கலியில் ஒருசில ஆலயங்களில் மட்டுமே இப்பெயர் தாங்கி அருள்கிறாள். இத்தகைய தலங்களுக்கு தம்பதி சகிதமாகவும், குடும்பத்தோடும் அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள். தீராத உறவுப் பகையுடன், மனத்தாங்கல்களுடன் கடுகடுப்பான வாழ்க்கையை நடத்தி வருவோர், சுமுகமான நல்வாழ்க்கையைப் பெற்றிட, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதியிலான ஸ்ரீமனோன்மணி தேவி வழிபாடு நன்கு உதவும்.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.