Skip to main content

"இதன்மூலம் கரோனா பரவுவது அரிது" - ஆறுதல் அளிக்கும் அமெரிக்கா!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

corona

 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா பரவல், வேகமெடுத்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், கரோனா பரவல் அதிகரித்தே வருகின்றது. இந்தநிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம், ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடும் இடத்திலிருந்து மற்றவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டு வந்தது. இதனையொட்டியே கரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், அவர்கள் பயன்படுத்திய இடங்களும் தீவிரமாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர், அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “கரோனா பரவிய இடத்திலிருந்து இன்னொருவருக்கு கரோனா பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம், கரோனா தடுப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கரோனா பரவியுள்ள இடத்தை தொடுவதன் மூலம், இன்னொருவருக்கு பரவுவது என்பது கிட்டத்தட்ட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவியுள்ள இடத்தை தொடுவதன் மூலம் இன்னொருவருக்கு கரோனா பரவுதல் என்பது 10,000 நிகழ்வுகளில், ஒன்றுக்கும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10,000 முறை, கரோனா பரவியுள்ள இடத்தை  ஒருவர் தொட்டாலும், அதில் ஒன்றிற்கும் குறைவான முறையே தொட்டவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது. 

 

மேலும் பாதிக்கப்பட்டவர் இருமும்போது, அவர் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறும் துளிகளால் மட்டுமே கரோனா அதிக அளவில் பரவுகிறது எனவும்  அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்