
15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது.
இந்த போர் முடிவுக்கு வந்தது என உலக மக்களும், பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த போரால் பெரிதும் பாதிக்கப்படும் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் காசா மக்கள் வாழ்வா? சாவா போராட்டத்தில் இருக்கின்றனர்.
அங்கு உணவில்லாமல் மக்கள் குறிப்பாக குழந்தைகள் தவித்து வரும் நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு இந்திய படைப்பான பார்லே-ஜி பிஸ்கட்டை வாங்கி கொடுத்துள்ளார். அந்த நெகிழ்ச்சியை எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முகமது ஜவாப் என்பவர் தன்னுடைய 5 வயது மகளுக்கு அவருக்கு பிடித்த பார்லே ஜி பிஸ்கட்டை வாங்கி கொடுத்துள்ளார். இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கும் பார்லே ஜி பிஸ்கட்டை 2,400 ரூபாய் விலை கொடுத்து தன் மகளுக்காக வாங்கியுள்ளார். முகமது ஜவாப்பின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.